சிதம்பரம்,டிச.1- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் நடவு செய்த வயல்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழமணக்குடி, பூவாலை, அருள்மொழிதேவன், சின்னாண்டி குப்பம், மணி கொள்ளை, அம்பாள்புரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழை வெள்ளத்தில் மூழ்கி வீணாகிறது. பாதிக்கப்பட்ட நெல் வயல்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட துணைத்தலைவர் கற்பனை செல்வம், ஒன்றிய செயலாளர் கொளஞ்சி உள்ளிட்ட விவசாயிகள் சங்கத்தினர் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று அழுகிய பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். இதுகுறித்து விவசாய சங்க தலைவர்கள் கற்பனை செல்வம், கொளஞ்சி கூறுகையில், கனமழையால் நெற்பயிர்கள் பச்சை பிடிக்கும் நேரத்தில் ஒரு வார காலத்திற்கு மேல் தண்ணீரில் மூழ்கி விட்டது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வடியும் தருவாயில் இருந்தாலும், நீர் வடிந்தவுடன் அனைத்து பயிர்களும் மடிந்துவிடும். அப்படியே பயிர்கள் வளர்ந்தாலும் மகசூல் கிடைக்காது. எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட தோட்டப் பயிர்களை கணக்கில் எடுத்து ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் வழங்க வேண்டும் மழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ 10 ஆயிரம் வழங்க வேண்டும், ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை இறப்பிற்கு கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர்.