districts

img

கொள்ளையர்கள் மீது நடவடிக்கை கோரி செந்தமிழ்நகர் மக்கள் தர்ணா போராட்டம்

கடலூர், டிச.24- பண்ருட்டி வட்டம், மருங்கூர் ஊராட்சி, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தொட்டி அருகில் அமைந்துள்ளது செந்தமிழ் நகர். 2009 ஆம் ஆண்டு மருங்கூர் ஊராட்சி யின் அனுமதி பெற்று 55 பேர் வீட்டு மனைகளை வாங்கி 10 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து வருகின்றனர். தற்போது நெய்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு நிலத்தை வாங்கி கொள்ளை லாபம் அடிக்கும் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் லஷ்மி ஐ கேர் ஜெய.வெங்கட்ராமன். இவர் தூண்டுதலின் பேரில் கீழக்கொல்லையை சேர்ந்த கே.ராஜேந்திரனின் ஏற்பாட்டில் 100-க்கும் மேற்பட்டவர்கள் டிசம்பர் 18 அன்று காலை செந்தமிழ் நகர் உரிமையாளர்கள் தங்கள் மனையில் அமைத்திருந்த 10-க்கும் மேற்பட்ட கொட்டகைகள், கட்டுமான பொருட்கள், சிமெண்ட் ஸ்லாப், சிமெண்ட் போஸ்ட், தகரத்திலான ஷீட், அத்துகற்கள் மற்றும் நகரின் இரண்டு அறிவிப்பு பலகை ஆகியவைகளை காவல் உதவி ஆய்வாளர் முன்னிலையிலே அடித்து, நொறுக்கி எடுத்துச் சென்றுவிட்டனர். இப்பொருட்களின் ஒட்டு மொத்த மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும்.  பொருட்களை திருடிச் சென்ற ரியல் எஸ்டேட் ஜெய.வெங்கட்ராமன், கீழக்கொல்லை கே.ராஜேந்திரன் உள்ளிட்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து  கைது செய்திட வலியுறுத்தியும், நிலத்தை அபகரிக்க முயலும் கும்பல்களின் இருந்து பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி செந்தமிழ் நகரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு  நகரின் தலைவர் கே.மணி  தலைமை தாங்கினார். செயலாளர் ஜி.குப்புசாமி, பொருளாளர் அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் டி.சிகாமணி, எஸ்.பாண்டியன், பி.அன்பழகன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.திருஅரசு முடித்து வைத்து பேசினார்.