ஆலப்புழா, ஏப்.21- புல்வாமாவில் ராணுவ வீரர்களை கொன்று குவித்து பாஜக தேர்தலில் வெற்றி பெற்றதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் தெரிவித்துள்ளார். இனி வரும் தேர்தலிலும் இதுபோன்ற சம்பவங்கள் மற்றும் கலவரங்களுக்கு சங் பரிவாரம் தயாராகிவிடும் எனவும் அவர் எச்சரித்தார். செங்ஙனூர் காரைக்காடு கோவிலில் மாப்பிளப்பாட்டு பாடல்களுக்கு தடை விதித்த ஆர்எஸ்எஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டத்தை எம்.வி.கோவிந்தன் துவக்கி வைத்தார். அப்போது அவர் மேலும் பேசுகையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை இந்துத்துவ நாடாக மாற்றிவிடும். இந்து மதம் பன்முகத் தன்மையை உள்ளடக்கியது என்று விளக்கிய விவேகானந்தர் வாழ்ந்த நாட்டில் தேசத்தை இந்துமயமாக்குகிறார்கள். ஹெட்கேவார் மற்றும் காங்கிரஸில் இருந்த பிற இந்துத்துவவாதிகள் இந்திய தேசிய காங்கிரஸை இந்துத்துவா கட்சி யாக மாற்ற முயன்றனர் மகாத்மா காந்தியும், பி.ஆர்.அம்பேத்கரும் அந்த நடவடிக்கையை முறியடித்த னர். ஜெர்மனியில் ஹிட்லர் செய்தது போல் 1925இல் ஆர்எஸ்எஸ் உருவாக் கப்பட்டு இனத்தூய்மை அறிவிக்கப் பட்டது. அரசமைப்பு சட்டத்தையே ஒழித்துவிட்டு மநுஸ்மிருதியை நாட்டில் அமல்படுத்துவதை ஆர்எஸ்எஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் பட்டினியை போக்க திட்டம் கொண்டு வருவதற்கு பதிலாக கோவில் தருவதாக மோடி கூறுகிறார். ஆனால், மிகவும் ஏழ்மையானவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு வீடு, நிலம், வேலை வழங்கும் திட்டம் கேரளாவில் நடந்து வருகிறது என்று எம்.வி.கோவிந்தன் கூறினார்.