கிருஷ்ணகிரி, மார்ச் 21- தமிழ்நாட்டிலிருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள் என்று பாஜக ஒன்றிய அமைச்சர் ஷோபா பேசியது கண்டனத்திற்கு உள்ளானது. பாஜக சார்பில் பெங்களூரில் நடந்த போராட்டத்தின் போது ஒன்றிய அமைச்சர் சோபா இந்த சர்ச்சை கருத்துக்களை தெரிவித்துள்ளார். சோபாவின் இந்த கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் அளித்துள்ளது. இதற்கிடையே, பெங்களூரு உணவக குண்டுவெடிப்பில் தொடர்பு கொண்டவர்கள் குறித்து மட்டுமே எனது கருத்து இருந்தது. தமிழ்நாட்டில் யாரேனும் எனது கருத்தால் வருத்தம் அடைந்திருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது கருத்தை திரும்ப பெறுகிறேன் என அமைச்சர் ஷோபா எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி எம்.பி. செல்லகுமார் கூறியதாவது. அமைதியாக வளர்ச்சியை நோக்கிச் செல்லும் தமிழ் நாட்டையும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பற்றியும் ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே கூறியது கடும் கண்டனத்திற்கு உரியது. பரஸ்பர சகிப்புத்தன்மை,மத நல்லிணக்கம்,அமைதியை விரும்பும் கிருஷ்ணகிரி மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வேலையாகவே பாஜக பெண் அமைச்சரின் குதர்க்க பேச்சை, நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அன்று கோட்சே எப்படி தேச தந்தை காந்தியை கொலை செய்து நாட்டில் கலவரத்தைத் தூண்ட முயற்சித்தானோ, அதே திட்டத்தை தான் இன்று பாஜக கிருஷ்ணகிரி தொகுதியில் திட்டமிட்டுள்ளது. இதை பொதுமக்கள் சார்பில் காங்கிரஸ் வன்மையாக கண்டிப்பதாக செல்ல குமார் கூறியுள்ளார்.