districts

img

துபாய் சர்வதேச யோகாசன போட்டிகள்

திருவள்ளூர், மே 14- துபாயில் நடைபெற்ற சர்வதேச யோகாசன போட்டிகளில், பதக்கங்களை குவித்த கும்மிடிப்பூண்டி மாணவர்களுக்கு, அப்பகுதி மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உட்பட்ட துபாய் நகரில், மே 11, 12ம் தேதிகளில், 10வது சர்வதேச அளவிலான யோகாசன போட்டிகள் நடந்தன. எஸ்ஜிஎஸ், இன்டர்நேஷனல் யோகா பவுண்டேஷன், துபாய் அறிவுசார் அமைப்பு, உலக யோகாசன அமைப்பு இணைந்து நடத்திய போட்டிகளில், இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து, 400க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டியாளர்கள் பிரித்து, அவர்களுக்குள் வயது வாரியக போட்டிகள் நடத்தப்பட்டன. கும்மிடிப்பூண்டி ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த, 18 பேர் இந்தியா சார்பில் பங்கேற்ற அணி யில் இடம் பெற்றிருந்தனர். அவர்களில், பயிற்சியாளர் சந்தியா, மாணவர்கள் லக்ஷயா, மைத்ரா, ஹேமஸ்ரீ, மகிழவன், யுவன் ஆகிய ஆறு பேர் அவரவர் வயது பிரிவில் தங்கம் வென்றனர். அதேபோன்று, பிரகதி, ஹரினிதா, ஜீவிகா, சஞ்சனா, அஸ்வின், பிரதீபன் ஆகியோர் வெள்ளி பதக்கங்களும், ஷம்ருதா, இந்துஸ்ரீ, நான்சி, திருசிவபூரணி, ஜோஷிகா, ஜோஷிதா ஆகியோர் வெண்கல பதக்கங்கள் வென்றனர். செவ்வாயன்று (மே14),  காலை நாடு திரும்பிய அனைவருக்கும் கும்மிடிப்பூண்டி யில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவகுமார் தலைமையில் பெற்றோர், பொதுமக்கள் என ஏராளமானோர் ஒன்று திரண்டு பேண்டு வாத்தியங்கள் முழங்க, அனைவருக்கும் மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

;