சென்னை, ஜூன் 8- துணிவு மற்றும் வீர சாகசச் செயலகளுக்கான “கல்பனா சாவ்லா விருது”க்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: துணிவு மற்றும் வீர சாகசச் செயலகளுக்கான “கல்பனா சாவ்லா விருது” 2021 துணிவு மற்றும் சாகசச் செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் சுதந்திரதின விழாவின் போது வழங்கப்படுகிறது. இந்த விருதில் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையும் ஒரு பதக்கமும் வழங்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த ஒரு பெண் இந்த விருதினைப் பெற தகுதியுடையவராவர்.
இயற்கை பேரழிவுகள், விபத்துக்கள், நீரில் மூழ்கும் சம்பவங்கள், தீ தொடர்பான சம்பவங்கள், திருட்டு மற்றும் துணிச்சலான முயற்சிகள் ஆகியவற்றின் போது பல தனிநபர்கள் நிகழ்த்திய பல்வேறு வீர சாகசச் சம்பவங்கள் தொடர்பாக இந்த விருது வழங்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டிற்கான “கல்பனா சாவ்லா விருது” பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் தகுந்த ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலமாகவோ அரசு செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு 30.6.2021-க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என்றும், விருதுபெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுவர் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.