எரிவாயு குழாய் சேதம் உடனடியாக சீரமைப்பு
செங்கல்பட்டு, மே 2- தண்ணீர் குழாய் பதிப்பதற்காக பெரும்பாக்கத்தில் பள்ளம் தோண்டியபோது இயற்கை எரிவாயு குழாயில் ஏற்பட்ட சேதம் உடனடியாக சீரமைக்கப்பட்டு எரிவாயு விநியோகம் மீண்டும் தொடங்கியது. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் இயற்கை எரிவாயுவை ஏஜி&பி பிரதம் நிறுவனம் குழாய் மூலம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழங்கி வருகிறது. தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பெரும்பாக்கம், ஜெயா நகர், 9வது குறுக்குத் தெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக வார்டு உறுப்பினர் மாரி என்பவர் அந்தப் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அதற்காக ஜெசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டிய போது அந்தப் பகுதியில் ஏஜி&பி பிரதம் நிறுவனம் பதித்துள்ள இயற்கை எரிவாயு குழாயில் சேதம் ஏற்பட்டு அதில் இருந்து எரிவாயு கசியத் தொடங்கியது. இது குறித்து உடனடியாக எரிவாயு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து இந்நிறுவன ஊழியர்கள் அப்பகுத்திக்கு விரைந்து சென்று சேதம் அடைந்த குழாய் களை உடனடியாக சீரமைத்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் எரிவாயு விநியோகம் சீரடைந்தது.