districts

img

மேல்பாதியில் வழிப்பாட்டு சமத்துவம் நிலைநாட்ட வேண்டும் மாவட்ட நிர்வாகத்திடம் அனைத்துக் கட்சி வலியுறுத்தல்

விழுப்புரம், ஜூன் 5-

     மேல்பாதி கிராம திரவுபதி அம்மன் கோயிலில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூன்7) வழிபாட்டு சமத்துவம் நிலை நாட்டப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரி வித்துள்ளது. 

    விழுப்புரம் மாவட்டம்,கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பாதி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. திரவுபதி அம்மன் கோயில். அதே ஊரைச் சேர்ந்த பட்டியலின மக்கள் வழிபடுவதற்கு ஒரு தரப்பு அனு மதிக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராம மூர்த்தி தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் பழனியை சந்தித்தனர். அப்போது கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

    மேல்பாதி கிராமத்திலுள்ள திரவுபதி அம்மன் கோயிலில் அதே ஊரைச் சேர்ந்த இந்து பட்டியலின மக்கள் வழிபடுவதற்கு அங்குள்ள ஒரு சமூகப் பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

    கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அந்தக் கோயில் திருவிழாவின் போது, வழிபட வந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பட்டி யலின சமூகத்தின் கதிரவனை அங்கிருந்த ஒரு சமூகப் பிரிவினர் தாக்கினர். அதைத் தடுக்க முயற்சித்த கந்தன், கற்பகம் ஆகியோரும் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

   “நாட்டில் எவர் ஒருவரையும் பொது இடத்தில் நுழைய விடாமல் தடுப்பது சட்டப்படி குற்றமாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 15இல் அது தெளி வாக்கப்பட்டுள்ளது. அதுபோலவே அரசிய லமைப்புச் சட்டத்தின் உறுப்பு 17 தீண்டாமையை கடைப்பிடிப்பதை குற்றம் என அறிவித்துள்ளது. தமிழ்நாடு கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டம் 1947இன் படி அனைத்து கோயில்களிலும் இந்துக்கள் அனைவரும் தடையின்றி வழிபடுவதை உறுதி செய்துள்ளது”.

     தற்போது பிரச்சனையாக மாறியுள்ள திரவுபதி அம்மன் கோயில் 1978 முதல் கடந்த 45 ஆண்டுகளாக இந்து சமய அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கான ஆவணங்களும் தெளி வாக இருக்கின்றன. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை தனது உரிமையை ஆவணங்களின் அடிப்படை யில் உறுதி செய்திருக்கிறது.

      ஏப்ரல் 12 ஆம் தேதி இந்த கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை தக்கார் ஒரு வரையும் நியமனம் செய்துள்ளது. உண்மை இவ்வாறு இருந்தும் ஒரு பிரிவினர் சட்டத்துக்குப் புறம்பாக தீண்டாமையை கடைபிடிப்பதும், பட்டியலின சமூகத்தினர் வழிபடுவதை அனுமதிக்க மாட்டோம் என்றும் தடுத்து வருகின்றனர்.

    இந்தப் பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் கடந்த இரண்டு மாதமாக பல கட்டமாக முயற்சி களை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மயிலம், விக்கிரவாண்டி, விழுப்புரம், சட்டமன்ற உறுப்பினர்கள், விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தையும் நடந்திருக் கிறது. கோட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும் பல கட்டங்களாக பேச்சு நடந்துள்ளன. ஆனாலும்கூட இதுவரை எந்தத் தீர்வும் காணப்படவில்லை.

    இந்த நிலையில், விழுப்புரத்தில் 11 கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினோம். அந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    மேல் பாதியிலுள்ள திரவுபதி அம்மன் கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபடுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அதைத் தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி அறங்காவலர் குழு உடனடியாக அமைக்க வேண்டும்.

     மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள 1,068 திருக் கோயில்களிலும் அறங்காவலர் குழுக்களை அமைத்து, அங்கு வழிபாட்டு சமத்துவம் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் மாவட்ட ஆட்சியர் அறிக்கை பெற வேண்டும்.

     இந்து சமய அறநிலையச் சட்டம் 1959 பிரிவு 106இல் எவ்வித பாகுபாடு மின்றி பிரசாதம், தீர்த்தம் வழங்க வேண்டும் என உள்ளது. அதற்கு மாறாக செயல்படும்  திரவுபதி அம்மன் கோயில் பூசாரியை அந்தப் பொறுப்பிலிருந்து அகற்றி அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூன் 7)சட்டப்படி வழிபாட்டு சமத்துவம் நிலை நாட்டப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

   அவ்வாறு செய்யா விட்டால் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என தீர்மானித்து உள்ளோம்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.