திருவண்ணாமலை, மே 7- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் நடைபெற்றது. இதில் மாநிலத் துணைத் தலைவர் டி. ரவீந்திரன் சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் டி. கே. வெங்கடேசன் மாவட்ட செயலாளர் அ. உதயகுமார், மாவட்ட பொருளாளர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து தாலுகாகளிலும் கடும் வறட்சி ஏற்பட்டு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், மாவட்டத்தில், குடிநீர் தட்டுப்பாடு, கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை, விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு வறட்சி நிவாரண பணிகளை விரைவில் துவக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்திற்கான 1150 உறுப்பினர் சந்தாக்கள் வழங்கப்பட்டது. மேலும், உழவன் உரிமைக்கான ஆண்டு சந்தா 10 வழங்கப்பட்டது.