கிருஷ்ணகிரி, ஏப். 20- தளி ஒன்றியம் கல்கேரி பகுதியில் தோழர் சுரேஷின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சனிக்கிழமையன்று (ஏப்.20) நடைபெற்றது. தேன்கனிக்கோட்டை வட்டம், தளி ஒன்றியம் கொடியா ளம் ஊராட்சி கல்கேரியில் தலித் மக்களின் உரிமைக்காக போராடியவர் கல்கேரி சிபிஎம் கிளைச்செயலாளர் தோழர் சி.சுரேஷ். இவர் 2009 ஆண்டு ஜனவரி 1 அன்று தலித் மக்களை ஒன்று திரட்டி ஆலைநுழைவு போராட்டம் நடத்தி அம்மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதனை பொறுத்துக்கொள்ளமுடியாத ஆதிக்க சாதியை சேர்ந்த கோவிந்தப்பா மகன் முருகேஷ் உள்ளிட்ட சிலரால் 2018 ஏப்ரல் 19 ஆம் தேதி இரவு வனப்பகுதியில் தோழர் சுரேஷ் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நயவஞ்சகமாக கொலை செய்யப்பட்ட தோழர் சுரேஷின் 7 வது நினைவஞ்சலி கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தளி வட்டச் செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் கல்கேரியில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், இருதயராஜ்,மாவட்ட குழு உறுப்பினர்கள் அனுமப்ப, சீனிவாசன், மையக்கிளை செயலாளர் நடராஜன்,கல்கேரி கிளை செயலாளர் முருகேசன் கலந்து கொண்டனர்.