districts

சென்னை முக்கிய செய்திகள்

 மத்திய பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை, டிச. 13- சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாது காப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கடந்த 6 மாதங்களாக மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த குமார் (38) என்பவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் காம ராஜர் துறைமுக ஸ்டேஷன் சிக்னல் பாயிண்ட் அருகே பணியில் இருந்துள்ளார். குமாரின் பணி நேரம் முடி வடைந்து,  அவரை தணிக்கை செய்ய உதவியாளர் ராஜு வந்துள்ளார். அப்போது அதிகாலையில் இன்சாஸ் ரக துப்பாக்கியை கையில் பிடித்தபடி தலையில் ரத்த காயத்து டன் இறந்த நிலையில் இருந்த குமாரை பார்த்து ராஜு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உதவியாளர் உயர் அதிகாரிகளுக்கு தக வல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் மீஞ்சூர் காவல் நிலை யத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு வந்த மீஞ்சூர் காவல் துறையினர் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, குமார் பணி சுமை காரண மாக உயிரை மாய்த்துக் கொண்டாரா, அல்லது குடும்பப் பிரச்சனை காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று முதல் தடுப்பூசி முகாம்

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் திருவள்ளூர் மாவட்டஆட்சியர்  பிரபு சங்கர் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜவஹர்லால் மேற்பார்வையில் 55 மருத்துவ குழுவைக் கொண்டு 144 சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்று வருகிறது.வியாழக் டகிழமை முதல் ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

 சிதம்பரத்தில் பள்ளி குழந்தைக்கு நேர்ந்த துயரம்

சிதம்பரம், டிச. 13- சிதம்பரம்  காரைக்காட்டு சொக்கலிங்கம் தெருவில் வசித்து வருபவர் ஜம்புலிங்கம். இவரது மகள் ஜனுஷிகா (8). சிதம்பரம் அருகே வயலூர் கிராமத்தில் உள்ள  தனி யார் பள்ளியில்  3 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஜம்புலிங்கம் தனது மகளை பள்ளியில் விடுவதற்காக  இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.  சிலுவை புரம் புறவழிச் சாலை மேம்பாலத்தின் கீழே  சென்ற போது எதிரே வந்த லாரி இருசக்கர வாக னத்தின் மீது மோதியது. இதில் தவறி கீழே விழுந்த ஜனுஷிகாவின் தலையில் லாரி யின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. அவரது தந்தை ஜம்புலிங்கத்திற்கு  பலத்த காயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா காவல் நிலைய காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த ஜம்புலிங் கத்தை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ஜனுஷிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிதம்பரம் புறவழிச் சாலையில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து வரு கிறது. இந்த பணிகளில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் பணிகளை செய்வதாலேயே இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது.

கட்டணமில்லா பயிற்சி வகுப்பு:   ராணிப்பேட்டை  ஆட்சியர் தகவல்

ராணிப்பேட்டை, டிச. 13 - தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ள காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பத்தை கைபேசி எண்ணுடன் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் வளர்மதி  கேட்டுக் கொண்டுள்ளார்.

சு.வெங்கடேசன் எம்.பி. முயற்சிக்கு வெற்றி  புயலால் ‘யுஜிசி- நெட்’ தேர்வை  தவறவிட்ட மாணவர்க்கு இன்று மறுதேர்வு

புதுதில்லி, டிச. 13 - கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக பணிபுரிவதற்கும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவதற்குமான (Junior Research Fellowship - JRF), தேசிய தகுதித் தேர்வு (NET) ஜூன் மற்றும் டிசம்பர் என ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது.  முதுகலை படித்து முடித்த மாணவர்களும், கல்லூரி விரிவுரையாளர்களும் இத்தேர்வை எழுதுவர். அதன்படி 2023-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்டத் தேர்வுகள் டிசம்பர் 6 அன்று நடைபெற்றன. ஆனால், அன்றைய தினம், ‘மிக்ஜம்’ புயல் மற்றும் மழை வெள்ளப் பேரிடர் காரணமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த பலர் தேர்வில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிப்பதாகவும் அமைந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து, நாடாளுமன்றத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், ‘’கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையான சேதத்திற்குள்ளாகி இருக்கின்றன. ஆனால், ஒன்றிய அரசு ‘டெட்’ தேர்வை சென்னையிலே நடத்தி இருக்கிறது. நாட்டிலே என்ன நடக்கிறது என்று தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு இருக்கும் துறையாக கல்வித்துறை இருக்கிறதா? என்று கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். யுஜிசியின் இந்த நடவடிக்கையால் பல்வேறு மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுத முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.எனவே, யுஜிசி சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த தேர்வை மீண்டும் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ குறிப்பிட்டிருந்தார். அத்துடன், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் நேரில் சந்தித்து மறுதேர்வு நடத்துமாறு கோரிக்கை விடுத்தார். அமைச்சரும் இதுபற்றி பரிசீலிப்பதாக உறுதியளித்திருந்தார். இந்நிலையில், சென்னை மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் (Michaung), டிசம்பர் 6 அன்று அனைத்துப் பாடங்களுக்கான தேர்வில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு மட்டும் மற்றொரு வாய்ப்பை வழங்கும் வகையில், சென்னை மற்றும் நெல்லூர் மைய விண்ணப்பதாரர்களுக்கு டிசம்பர் 14 அன்று மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற யுஜிசி நெட் (UGC -NET) தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு வியாழனன்று (டிச.14)மறுதேர்வு நடைபெறுகிறது. தனது கோரிக்கையை ஏற்று மறுதேர்வு அறிவித்தமைக்காக, ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார்.

பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டம்: சிபிஎம் போராட்டத்திற்கு வெற்றி

திருவண்ணாமலை, டிச.13- கடந்த சட்டமன்றத் தேர்தலில் 100 நாள் வேலைத்திட்டம் நகர்ப்புறங்களுக்கு  விரிவு படுத்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. அதன்படி, நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் என்ற பெயரில் 37 பேரூராட்சிகளுக்கு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இத்திட்டத்தை அனைத்து பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்த வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கமும் தொடர்ந்து போராடியது. ஏற்கெனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் பேரூராட்சிக்கு மட்டும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. இத்திட்டத்தை திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 பேரூராட்சிகளுக்கு விரிவு படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் இடைக்குழு உறுப்பினர் பெரணமல்லூர் பேரூராட்சி கவுன்சிலர் மா. கௌதம் முத்து மன்றக் கூட்டத்தில் இது குறித்து வலி யுறுத்தி வந்தார். அதனைத் தொடர்ந்து பெரணமல்லூர் பேரூராட்சியில் இதற்காக பல போராட்டங்கள் நடைபெற்றன. அதன் விளை வாக பெரணமல்லூர் உள்ளிட்ட 50 பேரூ ராட்சிகளுக்கு இத் திட்டத்தை விரிவுபடுத்த அரசு ஆணை (எண் 138 -நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள் 20.10.23) பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் 2023.-24  நடப்பு நிதியாண்டில் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று கட்சியின் வட்டார செயலாளர் ந.சேகரன் தெரிவித்துள்ளார்.