கடலூர், மார்ச் 30- அனுமதி இன்றியும் பொதுமக்களுக்கு இடையூறாகவும் தேர்தல் பரப்புரை செய்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வேட்பாளர் தங்கர் பச்சான் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கடலூர் தொகுதியில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் போட்டி யிடுகிறார். இந்நிலையில் அவரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திடீர் நிகழ்ச்சியாக கடலூர் முதுநகர் பகுதியில் சனிக்கிழமை காலை பரப்புரை மேற்கொண்டார். இதனையடுத்து முன்னறிவிப்பு இன்றியும் உரிய அனுமதி பெறாமலும், நடுரோட்டில் நின்று கொண்டு பொது மக்களுக்கு இடையூறாக கடலூர் முதுநகர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டதாக பாரதீய ஜனதா கட்சி ஓபிசி பிரிவு மாநில நிர்வாகி சாய் சுரேஷ், பாஜக கடலூர் மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன், பாமக மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன், பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.