districts

img

ஆரோவில்: மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு தடை

சேதராப்பட்டு, ஜன. 12- ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் அன்று ஆரோவில் குயிலாப்பாளையத்தில் நடக்கும் மஞ்சுவிரட்டு பிரசித்தி பெற்றது. இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தமிழ் கலாச்சார உடை அணிந்து கலந்து கொள்வார்கள். மாடுகள் அலங்கரிக்கப்பட்டு மாட்டின் மீது பழங்களையும், பலூன்களையும் கட்டி  மாட்டை விரட்டுவார்கள். அப்போது அங்கு கூடியிருக்கும் வெளிநாட்டினர் உற்சாகத்துடன் இதை கண்டுகளிப்பார்கள். மேலும் தமிழர்களுடன் வெளிநாட்டினர் உறவினர் போல் உறவாடுவதும், ஒருவருக்கொருவர் மாறிமாறி முகத்தில் வண்ணங்களை பூசி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர். தற்போது நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று காரணமாக வருகிற 16ஆம் தேதி தமிழ்நாட்டில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் காணும் பொங்கல் விழா என்பதால் அன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை வழக்கம்போல் நடத்த கோட்டக்குப்பம் துணை காவல் கண்காணிப்பாளர் அருணிடம் குயிலாப்பாளையம் பஞ்சாயத்து நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக அரசின் முழு பொதுமுடக்கம் காரணமாக அன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று துணை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.