சிதம்பரம், ஆக 28- சிதம்பரம் நகரில் நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றாக வீட்டு மனைப் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் இம் மாதம் 30 ஆம் தேதி சிதம்பரம் சாராட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதையடுத்து, ஆக. 28 அன்று சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி, சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ரமேஷ் பாபு, உதவி ஆய்வாளர் பரணிதரன், சிபிஎம் நகர செயலாளர் ராஜா, நகர மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன் மற்றும் வீடுகளை இழந்த மக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாற்று இடம் வழங்க உத்தரவாதம் அளிக்காத வருவாய் துறை அதிகாரிகள், இன்னும் 15 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றனர். இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே, திட்டமிட்டப்படி ஆக. 30 அன்று காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றும் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்பார் என்றும் சிபிஎம் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.