districts

வாயு கசிவுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை: பசுமை தீர்ப்பாயம்

சென்னை, ஜன.2 - அமோனியம் வாயு கசிவுக்கு யார் காரண மாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம்  பகுதியில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலை யில் இருந்து கடந்த 26ஆம் தேதி நள்ளிரவு திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து 30க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, வாயு கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசும் உத்தரவிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பி னர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ  உறுப்பினர் சத்யகோபால் அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணை செய்தது. இந்த  வழக்கு செவ்வாயன்று (ஜன. 2) விசாரணைக்கு வந்தது. அப்போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்  தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அம்மோனியக் கசிவின் பாதிப்பு அதிகாலை உணரப் பட்டது. 20 நிமிடத்தில் கசிவு கட்டுப் படுத்தப்பட்டது. உடனடியாக அம்மோனியம் வாயு வெளியேற்றம் கட்டுப்படுத்தப்பட்டது. இதை யடுத்து அதிகாரிகள் தொழிற்துறை பாதி காப்பு சட்டம் 33(ஏ) படி நிறுவனம் தற்காலிக மாக மூடப்பட்டது. நிறுவனத்திடம் விபத்துக் கான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழிற்சாலை பாதுகாப்பு துறை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 100 மீட்டர் சுற்றளவு வரை குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது. கோரமண்டல் நிறுவனத்தில் சுமார் 12,500 கொள்ளளவு அமோனியா சேமித்து வைக்கும் வசதியுள்ளது. கப்பலில் இருந்து கொண்டு வரப்படும் அமோனியாவை நிறுவனத்திற்கு எடுத்துச் செல்ல குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழாயில் ஏற்பட்ட அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே கசிவு ஏற்பட்டது. குளி ரூட்டும் கருவி சரியாக செயல்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வாயு கசிவால் சுமார் 60 பேர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட னர். இதில், 5 பேர் ஐசியு-வில் வைக்கப்பட்டனர். வாயுக்கசிவு விபத்து கடலில் இருந்து 2 அடி தூரத்தில் நடந்துள்ளது. உயர்மட்ட குழு  அமைக்கப்பட்டு காற்றின் தரம் ஆய்வு செய்யப் பட்டது. பாதிப்புகள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கோரமண்டல் நிறுவனம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது. அதன் கட்டமைப்புகள் குறித்து கடல்சார் வாரியம் கண்காணித்து வருகிறது என்று கூறினார்.

கோரமண்டல் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கப்பலில் அம்மோனியம் கொண்டு வரப்படும் போது உரிய ஆய்வு செய்யப்படும், பின்னர் குழாய் மூலமாக கொள்கலனுக்கு கொண்டு செல்லப்படும். ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அறிக்கைகளை தாக்கல் செய்கிறோம். 1996ஆம் ஆண்டு முதல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது இல்லை. அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது போன்ற நிறுவனங்களை மூட வேண்டும். அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதிப்பு உணரப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு இது போன்ற சம்பவம் நடைபெற்றது. மக்கள் 120 பேர் வரை மூச்சுத்திணறலால் அப்போது பாதிக்கப்பட்டனர். பாதிப்புகள் ஏற்படும் போது தற்காலிகமாக மூடுவதை அதிகாரிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர். தற்போது 8 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய நீதி வழங்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாகவே நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. ஏன்  விபத்து நடப்பதற்கு முன் நடவடிக்கை எடுக்க வில்லை? மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏன் தொடர்ந்து கண்காணிக்கவில்லை. அவ்வ போது நிறுவனத்தில் ஆய்வு நடத்தப் பட்டதா? ஏன் அதை செய்யவில்லை. அந்த பகுதி மக்களுக்கு வாயு கசிவின்  விளைவு தெரியுமா, மக்கள் கடல் பகுதியில் இருந்தார்களா, அல்லது வீடுகளில் இருந்த போது  மூச்சுத் திணறல் ஏற்பட்டதா, கோரமண்டல் நிறுவனம் ஏன் தொடர் ஆய்வு செய்யவில்லை, 5 மடங்கு அதிகமாக சேர்த்து வைத்ததே காரணம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குற்றம் சுமத்துகிறது. அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். விபத்துகள் நடைபெறுவது இயற்கை, விபத்து நடைபெற்றது என்பதற்காக நிறுவனத்தை மூடிவிட முடியாது. ஆனால் அதிலிருந்து தற்காத்து கொள்ள நடவடிக்கை எடுக்கலாம். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொழில்துறை பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது கட்டா யம். 40 ஆண்டுகள் பைப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால், தற்போது அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அமோனியம் கசிவுக்கு யார் காரணமாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படும் என தெரிவித்து, கடல்சார் வாரியம்,  மீன்வளத்துறை, தொழில் பாதுகாப்புத்துறை இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தர விட்டு வழக்கை ஜனவரி 8க்கு  ஒத்திவைத்தனர்.