கடலூர்,டிச.20- கடலூர் முதுநகர் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் கணவன்- மனைவி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி நீர்முனை வட்டத்தைச் சேர்ந்தவர் வை.ராம் (65). இவரது மனைவி லலிதா (58). இவர்கள் இருவருக்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க முடிவு செய்தனர். இதையடுத்து சென்னை ஆவடியில் வசிக்கும் இவர்களது மருமகன் ரமேஷ் என்பவர் சென்னையில் இருந்து தனது காரை திருத்துறைப்பூண்டிக்கு அனுப்பினார். அங்கிருந்து ராம் , லலிதா ஆகியோரை ஏற்றிக்கொண்டு காரை கோதண்டம் (50) என்பவர் ஓட்டிச்சென்றார். ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்ட கார் இன்று அதிகாலையில் கடலூர் முதுநகர் அருகே சிப்காட் பகுதியில் வந்த போது ஓட்டுநரிங கட்டுப்பாட்டை இழந்த கார், திடீரென சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் லலிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராம் மற்றும் கோதண்டம் ஆகியோர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். தகவலறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லலிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கோதண்டம் மற்றும் ராம் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இது குறித்து கடலூர் துறைமுகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.