districts

img

விவசாய சங்கத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல்

திருவண்ணாமலை, ஏப்.7- திருவண்ணாமலை அடுத்த கோவூர் கிராமத்தில் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஜி. அண்ணா மலையின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய  சமூக விரோதிகள்  இதுவரை கைது செய்யப்படவில்லை. இது குறித்து,  கலசப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மேல்முறையீடு செய்யப்பட்டதில்,  அவர் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். ஆனாலும்,  குற்றவாளிகள் யாரும்  கைது செய்யப்படவில்லை. ஏற்கெனவே கடந்த மார்ச் 10 அன்று அண்ணாமலை மீது கொலை வெறித்தாக்குதல் சம்பவம் நடந்தது. அதுகுறித்து  அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மீண்டும்  சனிக்கிழமையன்று 6 பேர் கொண்ட  கும்பல் கோவூரில் அண்ணாமலை வீட்டிற்கு சென்று  தாக்கினர். மேலும் அவருடைய மனைவி, அப்பா, அம்மாவையும் தாக்கியுள்ளனர். இந்நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.   விவசாய சங்க தலைவர் அண்ணாமலை அவருடைய மனைவி, அப்பா, அம்மா 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இது சம்பந்தமாக துரித நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட மாவட்ட  காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் டி.கே.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.