சிதம்பரம், ஜன. 10- கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட வட்டார பகுதிகளில் கடந்த 8 ஆம் தேதி இரவில் மட்டும் 38 செ. மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் நந்தி மங்கலம், திருநாரையூர் உள்ளிட்ட கிராமப் பகுதியில் உள்ள தாழ்வான குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியது. இன்று வரை தண்ணீர் வடியவில்லை. அதே நேரத்தில், சிதம்பரத்திற்கு அருகே உள்ள சிவக்கம், வல்லம் படுகை, அம்மாபேட்டை, குமராட்சி, குச்சிபாளையம், பெராம்பட்டு, கீழப்பருத்திக்குடி, வடக்கு மாங்குடி, தெற்கு மாங்குடி, உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெல் கதிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் ஒரே நாள் இரவில் பெய்த மழையால் அனைத்து பயிர்களும் தண்ணீரில் சாய்ந்து விட்டது. பொக்ளின் இயந்திரம் மூலம் தொடர்ந்து தண்ணீர் வெளி யேற்றியும் கடந்த இரண்டு நாட்களாக நெல் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், நெற்கதிர்கள் முளைத்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதே போல் சிதம்பரம், காட்டு மன்னார்கோவில், புவனகிரி பகுதி யில் 1000 ஏக்கருக்கு மேல் மணிலா பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வேளாண் மற்றும் வருவாய் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி விவசாயி களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறுகையில், “காப்பீட்டுதுறை அலுவலர்கள் இது குறித்து கணக்கெடுப்பு நடத்தி வரு கிறார்கள். விவசாயிகளுக்கு உரிய காப்பீடு தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.