districts

16 குடிசைகள் எரிந்து சாம்பல்

திருவண்ணாமலை,ஆக.8-

    வந்தவாசி அடுத்த மாலையிட்டாங்குப்பம் பகுதியில் உள்ள முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நகரில் உள்ள 16 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது.

   வந்தவாசி தாலுகா, காரம் ஊராட்சி, மதுரா மாலையிட்டான் குப்பம் கிராமத்தில், பாய் நெசவு, கோரை சாயம்போடுதல் மற்றும் கூலி வேலை செய்துவரும்  இஸ்லாமிய குடும்பத்தினர் பல ஆண்டு காலமாக வசித்து வந்தனர். வசிக்க வீடு இல்லாமல் தவித்த இஸ்லாமிய கூலி தொழிலாளர் குடும்பத்தினர்களுக்கு, ஊருக்கு வெளியே, தீர்வு ஏற்படுத்தாத தரிசு நிலத்தில் வீடு கட்டி குடியிருக்க ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் போடப்பட்டது.

    அதன் அடிப்படையில் அந்த இடத்தில் கடந்த 2022  ஆம் ஆண்டு முதல், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நகர் ஏற்படுத்தப்பட்டு அதில்  சுமார் 35 முஸ்லிம் குடும்பத்தினர் குடிசை வீடு கட்டி, வீட்டுவரி செலுத்தி, ஆதார் அட்டை, ரேஷன் அட்டைகள்  பெற்று  குடியிருந்து வருகின்றனர். கிராம சபை கூட்டத்தில் அவர்களுக்கு  பட்டா வழங்க வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது. தங்கள் வசிப்பிடங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என   இஸ்லாமிய மக்கள் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார்,  மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், பொதுப்பணித்துறை எ.வ.வேலு   ஆகியோரிடம் முறையிட்டுள்ளனர். இதுவரை பட்டா கிடைக்காத நிலையில் செவ்வாயன்று (ஆக.8) அங்கிருந்த 16 குடிசை வீடுகள் தீவிபத்தில் எரிந்து சாம்பலானது. அந்த வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் எரிந்து சேதமானது.

    தகவலறிந்த வந்தவாசி தீயணைப்பு துறையினர் அங்கு வந்து தீயை அணைத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி சார்பில் அப்துல்காதர், சுகுமார், யாசர்அராபத் உள்ளிட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி உதவி செய்தனர்.