சென்னை, ஜூன் 3-
சென்னை கோடம்பாக்கம் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் ஒரே நாளில் 11 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.
சென்னை பெருநகரில் போதை தடுப்பு நடவடிக்கை மூலம் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை கடத்தி வருபவர்களையும் மற்றும் விற்பனை செய்பவர்களையும் சென்னை பெருநகர காவல்துறையினர் கைது செய்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே மது விலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினருக்கு தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் காவல் துறையினர் கோடம்பாக்கம் ஆற்காடு சாலை பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர் வைத்திருந்த பையில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது, அவரிடம் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் கொளத்தூர் காவல்துறையினர் கொளத்தூர் தைலம் தோப்பு பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த நபரை பிடித்து சோதனை மேற்கொண்டனர். சோதனையில் விற்பனைக்காக 1.2 கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் அவர் அருகில் நின்றுகொண்டிருந்த நபரை விசாரணை செய்தபோது அவர் கஞ்சா பெற்று விற்பனை செய்பவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 3) ஒரே நாளில் மட்டும் 11 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.