பொங்கல் திருநாள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது செங்கரும்பு தான். அடுத்து மஞ்சள், இஞ்சிக் கொத்து, அறுவடை யில் கிடைத்த புதுப் பச்சரிசி உள்ளிட்டவை முக்கிய இடம் பிடிக்கும். தமிழர்களின் திருநாளான பொங்கலை செங்கரும்புடன் கொண்டாடுவதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிக்கும் சிதம்பரம் பகுதியில் இருந்து அதிகமான செங்கரும்பு ஏற்றுமதி நீண்டகாலமாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டு கடவாச்சேரி, பழைய நல்லூர், சாலியந்தோப்பு, பிள்ளை முத்தா சாவடி, அகர நல்லூர், வேளக்குடி, வாழ கொள்ளை, சேத்தியாத்தோப்பு, வீராணம் ஏரியின் படுகை, நடுவீரப்பட்டு, பாலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல ஆயிரம் ஏக்கரில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அது நல்ல விளைச்சலையும் அளித்திருந்தது.
இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் ஏற்றுமதி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதியில் விளைந்திருக்கும் செங்கரும்பை தமிழ்நாடு அரசே நேரடியாக கொள்முதல் செய்து, ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கி வருகிறது.
5 அடி உயரமுள்ள கரும்புக்கு 33 ரூபாய் கொடுக்கிறது. இது விவசாயிகளிடம் மேலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பழைய நல்லூர் பகுதியில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயி ஒருவர் கூறுகையில்,“ இந்த ஆண்டு மழை போதிய அளவு பெய்துள்ளது. மேலும் இயற்கை இடர்பாடும் ஏற்படவில்லை. இந்த நிலையில் கரும்பு விளைச்சல் மற்றும் மகசூல் அதிகரித்துள்ளது. 6 அடி முதல் 7 அடி வரைக்கும் கரும்பு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. அரசு நேரடியாக கொள்முதல் செய்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.