திருப்பூர், மே 17– தமிழ்நாட்டில் அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2009 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 11, மூன்று வயது முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாக பள்ளி முன் பருவக் கல்வியை அரசு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஆனால், கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த பிறகும் அரசுத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி முன் பருவக் கல்வி வழங்குவதற்கு மழலையர் வகுப்புகள் தொடங்கப்படவில்லை. சிரமப்பட்டாவது தனியார் பள்ளியில் படிக்க வைக்கலாம் என்ற மனநிலைக்கு பெற்றே வந்து விடுகின்றனர்.
எனவே, அரசு பள்ளிகளில் மாலையர் வகுப்புகளை தொடங்காமல் இருப்பது தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு மறைமுகமாக துணை புரிவதாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் சேரும் பெரும்பாலான குழந்தைகள் பள்ளி முன்பருவக் கல்வி பெறாதவர்களாக உள்ளனர். இதனால் பள்ளிப்படிப்பு தொடங்கும் நிலையில் இருந்தே ஏழைக் குழந்தைகளுக்கும் வசதியான குழந்தைகளுக்கும் இடையே கற்றல் மற்றும் அறிவாற்றல் இடைவெளி உருவாகிறது. தமிழ்நாட்டில் 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளின் ஆரோக்கியம், பராமரிப்பு மற்றும் போதுமான ஊட்டச்சத்து பெறுவதைப் பேணும் நோக்கத்தில் 50 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. அங்கன்வாடி மையங்களில் பள்ளி முன்பருவக் கல்வி வழங்குவதற்குத் தகுதியான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் வசதிகள் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. பள்ளி முன் பருவக் கல்வி கற்ற குழந்தையின் கற்றல் திறன்களைக் காட்டிலும் முன்பருவக் கல்வி வாய்ப்பை பெறாத குழந்தையின் கற்றல் திறன்கள் குறைவாக இருப்பதை பல்வேறு ஆய்வுகள் நிரூபிக்கின்றன. கல்வியைத் தொடங்கும் நிலையிலிருந்தே குழந்தைகள் அனைவருக்கும் தரமான சமமான கல்வியை கட்டணம் ஏதுமில்லாமல் கிடைக்கச் செய்வது அரசின் முதன்மையான பொறுப்பாகும்.