ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்ற பெண் மாயமான சம்பவம் ஜக்கி வாசுதேவ் மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல்களை கூற முடியாது என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சனியன்று மழுப்பிய நிலையில், மாயமான பெண் ஞாயிறன்று சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்த பழனிகுமார் என்பரின் மனைவி சுபஸ்ரீ. திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் இத்தம்பதியினர் பணியாற்றி வருகின்றனர். சுபஸ்ரீ கடந்த நான்கு வருடமாக ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று வந்தார். இதனிடையே கடந்த டிச.11 ஆம் தேதியன்று ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற ஒரு வார யோகா பயிற்சிக்காக ஈஷா மையத்தில் சுபஸ்ரீ தங்கியுள்ளார். இதையடுத்து கடந்த டிச.18 ஆம் தேதியுடன் பயிற்சி முடிவடைந்த நிலையில், மனைவியை அழைத்துச் செல்ல கணவர் பழனிக்குமார் ஈஷா மையத்திற்கு வந்து காத்திருந்துள்ளார். ஆனால், பயிற்சிக்கு வந்த அனைவரும் யோகா மையத்திலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், சுபஸ்ரீ மட்டும் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பழனிக்குமார் ஈஷா மைய நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, பயிற்சிக்கு வந்த அனைவரும் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
6 தனிப்படைகள்
இதுதொடர்பாக பழனிக்குமார் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, சுபஸ்ரீ டிச.18 ஆம் தேதியன்று காலையிலேயே ஈஷா மையத்திலிருந்து வெளியில் சென்றதும், ஈஷாவிலிருந்து இருட்டுப்பள்ளம் பகுதி வரை கால் டாக்ஸியில் சென்றதும், பின்னர் அவர் அங்கிருந்து பதற்றத்துடன் பதறியடித்து ஓடிச்செல்வதும் தெரியவந்தது. மேலும், சுபஸ்ரீ சாலையில் சென்ற பெண்ணிடம் செல்போனை வாங்கி பழனிக்குமாருக்கு பேச முயற்சித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் சுபஸ்ரீயை தேடி வந்தனர். இதனிடையே, சனியன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் மேற்கண்ட சம்வம் குறித்து கேள்வி எழுப்பியபோது, “ஈஷா யோகா மையத்தில் சிறப்பு வகுப்பிற்குச் சென்ற பெண் காணாமல் போனது தொடர்பாக, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழக்கு விசாரணையில் உள்ளதால் சில தகவல்களை வெளிப்படையாக கூற முடியாது” என பத்ரி நாராயணன் தெரிவித்தார்.
சடலமாக மீட்பு
இந்நிலையில், ஞாயிறன்று செம்மேடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மிதப்பதாக ஆலாந்துறை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலத்தை மீட்டனர். அப்போது, இறந்து கிடந்தது ஈஷாவிலிருந்து தப்பிச்சென்ற சுபஸ்ரீ-யாக இருக்கக்கூடும் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து பழனிகுமாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அங்கு வந்த பழனிக்குமார் சுபஸ்ரீ தான் என்பதை உறுதி செய்தார். இதனையடுத்து சுபஸ்ரீ-யின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. ஈஷா யோகா மையத்திலிருந்து மாயமான பெண் கிணற்றில் சடலமாக மீட்டெடுக்கபட்டுள்ள நிலையில், போலீசார் இதுகுறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்ச்சையின் கூடாரம் ஈஷா
இதனிடையே ஈஷாவிலிருந்து அனைவரும் பயிற்சி முடிந்து வெளியேறிய நிலையில், சுபஸ்ரீ மட்டும் முன்னதாகவே வெளியேறியது ஏன்? என்றும், தனது உடமைகளைக்கூட எடுக்காமல் பயிற்சிக்காக அணிந்திருந்த உடையுடன் பதறியடித்து ஓடுவது ஏன்? என்றும், தற்போது அவர் சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவம் தொடர் கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்தில் அடுத்தடுத்து நடைபெறும் சந்தேகத்திற்கிடமான சம்பவங்களால் அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி, அங்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவசர அவசரமான உடற்கூராய்வு ஏன்? சிபிஎம் கேள்வி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த டிச.18 ஆம் தேதியன்று ஈஷா யோகா மையத்திற்கு சென்ற இளம்பெண் சுபஸ்ரீ வீடு திரும்பவில்லை என்று கணவர் புகார் கொடுத்திருந்தார் காவல் துறை தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஞாயிறன்று சுபஸ்ரீயின் உடல் ஈஷா வளாகத்திற்கு அருகாமையில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காவல் துறையினர் அவசர அவசரமாக உடற்கூராய்வு செய்ய முயற்சிக்கின்றனர். இந்த நடைமுறை தவறானது. வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நீதிபதியின் விரிவான விசாரணைக்குப் பின்பே உடற்கூராய்வு செய்ய வேண்டும் என கோவை மாவட்ட காவல்துறையை கேட்டுக் கொள்கிறோம். மேலும், இச்சம்பவத்தில் கடந்த 12 நாட்களாக என்ன நடந்தது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது தமிழக அரசு மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கடமை என்பதையும் வலியுறுத்துகிறோம் என சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் தெரிவித்துள்ளார்.