தருமபுரி, மே 24- தருமபுரியில் மே 28, 29 ஆகிய தேதிகளில் சிறுதானிய மாநாடு நடைபெற உள்ளது. இதில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்ற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில், சிறுதானிய பயிர்கள் 1.25 லட்சம் ஏக்கரில் ஆண்டுதோறும் சாகுபடி செய்யப்படுகிறது. ராகி, மக்காச்சோளம், சாமை, திணை, வரகு உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், ராகி மட்டும் 37 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. பென்னாகரம், நல்லம்பள்ளி, தர்மபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, மொரப்பூர், கடத்தூர், ஏரியூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய வட்டாரங்களில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. சிறுதானியங்களிலிருந்து கூழ், களி, அடை, முறுக்கு, பிஸ்கட், சத்துபானங்கள் உள்ளிட்ட மதிப்புக்கூட்டு பொருட்கள் செய்து விற்பனை செய்யப்படுகிறது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் நேரில் வந்து வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முதல்வர் விவசாயிகளின் நலனுக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தருமபுரி மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணைந்து மண்டல அளவிலான சிறுதானிய திருவிழா மே 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது. இதனை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைக்க உள்ளார். இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இத்திருவிழாவில் 70க்கும் மேற்பட்ட கருத்து கண்காட்சி அரங்குகள், கருத்தரங்குகள், விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் உரையாடல், அனுபவம் உள்ள பேராசிரியர்களின் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது என்றார்.