மண் சரிவு காரணமாக மேட்டுபாளையம்-குன்னூர் இடையேயான மலைரயில் போக்குவரத்து வரும் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 1-ஆம் தேதி அதிகாலை பெய்த கனமழை காரணமாக தண்டவாள பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகளால் மேட்டுப்பாளையம்-உதகை இடையே இயக்கப்படும் நீலகிரி மலைரயில் சேவை தடைபட்டது.
சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் 1-ஆம் தேதி முதல் 6 ம் தேதி வரை மலைரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், திட்டமிட்டபடி சீரமைப்பு பணிகள் நிறைவடையாத காரணத்தால் தொடர்ந்து மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலைரயில் சேவை ரத்து நீடிக்கப்பட்டுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் முடியாத காரணத்தினால் இன்று வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது.
நாளை வழக்கம் போல் மலை ரயில் இயக்கப்படும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் வானிலை மையம் விடுத்துள்ள கனமழை எச்சரிக்கை மற்றும் சில இடங்கிளில் அவ்வப்போது தொடர்ந்து ஏற்படும் சிறு சிறு மண் சரிவுகளால் மேட்டுப்பாளையம் குன்னூர் ரயில் சேவை வருகின்ற 31 -ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.