மேட்டுபாளையம், ஜூன் 24- யானைகளுக்கு இடையே நடைபெற்ற மோதலே பாகுபலி யானை காயமடைய காரணமாக இருக்கலாம் என வன கால் நடை மருத்துவர் தெரிவித் துள்ளார். மயக்க ஊசி செலுத்த அதனை சமவெளி பகுதிக்கு கொண்டு வந்து சிகிச்சையளிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக சுற்றித்திரியும் பாகுபலி என்னும் ஒற்றை ஆண் காட்டு யானையின் வாய் பகுதியில் ஏற்பட்டுள்ள பலத்த காயத்துடன் சுற்றித்திரிவது வனத்துறை யினரால் கண்டறியப்பட்டது. இதன் காயத்திற்கு பிற யானையுடன் மோதல் காரணமா அல்லது சட்டவிரோதமாக காட்டு பன்றியை வேட்டையாடி கொல்ல பயன்படுத்தப்படும் அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடிகுண்டு காரணமா என்பது பாகுபலி யானையை மயக்க ஊசி செலுத்திய பின்னர் வனத்துறை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்த பின்னரே தெரிய வரும். காயமடைந்த பாகுபலி யானையின் நடமாட்டத்தை கடந்த இரு நாட்களாக வனத் துறையினர் கண்காணித்து வந்தாலும் பாகுபலி ஓரிடத்தில் நில்லாமல் தொடர்ந்து நகர்ந்தபடி இடம் மாறி கொண்டே இருப்பதால் அதனை இருப்பிடத்தை முடிவு செய்வதில் வனத் துறையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில், காயமடைந்த பாகுபலி யானையை சுற்றி வளைத்து ஓரிடத்தில் நிறுத்தி அதற்கு மயக்க ஊசி செலுத்த வெள்ளியன்று முதுமலை முகாமில் இருந்து அசீம் மற்றும் விஜய் என இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. வனத்துறையின் பிரத்யேக லாரியில் மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கிற்கு அழைத்து வரப்பட்டுள்ள கும்கி யானை கள் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு தங்க வைக்கப்பட் டுள்ளது. மூன்றாவது நாளாக 6 வனக்குழுவினர் மயக்க ஊசி செலுத்த பாதுகாப்பான சமவெளி பகுதிக்கு பாகுபலி யானையை கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மயக்க ஊசி செலுத்திய பின்னர் யானை சுமார் இருபது நிமிடங்கள் வரை தள்ளாடியபடி நடக்கும் என்பதால் சரிவோ, குட்டைகளோ, பள்ளங்களோ அல்லது புதர் பகுதி களோ இல்லாத சமவெளி வனப்பகுதி தேவைப்படுகிறது. தற்போது பாகுபலி யானை நெல்லித்துறை வனப் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சரியான இடத்தில் பாகுபலி வந்தடைந்ததும் அப்பகுதிக்கு கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டு மயக்க ஊசி செலுத்த வன மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய வன கால்நடை மருத்துவர் சுகுமாறன்,”முதற்கட்ட ஆய்வில் பாகு பலி யானைக்கு வாயில் ஏற்பட்ட காயத்திற்கு அவுட்டுக் காய் காரணமாக இருக்க வாய்ப்பில்லை. சிறிய அளவில் காயம் என்பதாலும் யானை ஆங்காங்கே உணவு உண்டுள் ளதாலும் இரு யானைகளுக்கிடையே மோதல் காரணமாக காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் பாகுபலி சரியான இடத்திற்கு வந்தவுடன் கும்கி யானைகளின் உதவியுடன் அதற்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்படும் என்றார். இதனைத்தொடர்ந்து, வனத்துறையினருடன் கால்நடை மருத்துவர்கள் இரண்டு மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கி களுடன் காட்டினுள் நுழைந்துள்ளனர். யானையை மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயத்தில் மயக்க ஊசி செலுத்தும் இடத்திற்கு செய்தியாளர்களை வனத்துறை யினர் அனுமதிக்கவில்லை.