districts

வேளாண் பல்கலை.,யில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு

கோவை, ஜூலை 15- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஜூலை 17 ஆம் தேதியன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவையிலுள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டில் இளம் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான இணையதள வழி கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் கடந்த ஜூலை 12 ஆம் தேதியன்று தொடங்கியது. 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டின்படி, அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜூலை 17 ஆம் தேதியன்று (நாளை) நடைபெற உள்ளது. தொழில்முறைக் கல்வி பாடப்பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு ஜூலை 16 ஆம் தேதியன்று (இன்று) வரை நடைபெற உள்ளது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜூலை 18 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. பொதுப்பிரிவினருக்கான இணையவழி முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 17 ஆம் தேதியன்று (நாளை) தொடங்கி 18 ஆம் தேதி வரை நடக்கிறது. கலந்தாய்வில் பங்கேற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜூலை 20 ஆம் தேதியன்று தொடங்கி ஜூலை 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுப்பிரினருக்கான நகர்வு முறை மற்றும் இணையதள வழி 2 ஆம் கட்ட கலந்தாய்வு வரும் ஜூலை 26 ஆம் தேதி மற்றும் 27 ஆம் தேதிகளில் நடக்கிறது.  பொதுப்பிரிவில் இணையதள வழி இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜூலை 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இணையதள வழி கலந்தாய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.