சிதம்பரம், டிச. 31 - சிதம்பரம் ரயில் நிலைய நடைமேடையில் இருப்புப்பாதை காவல் துறை மற்றும் கடலூர் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பு சார்பில் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்குச் காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். மாவட்டக் குழந்தைகள் நல அலுவலர் பார்திபராஜ், அலுவலர் சதிஷ்குமார், காவல் உதவி ஆய்வாளர் அன்பு ஜூலியட், ரவிச்சந்திரன் உள்ளிட்ட காவலர்கள் நடைமேடைகளில் இருந்த பயணிகளிடம் குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்தும், ஆபத்தில் சிக்கியிருக்கும் குழந்தைகளை மீட்க 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும் குழந்தைகளை அடித்துத் துன்புறுத்துதல் உள்ளிட்ட இதர கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளைப் பார்த்தாலும், குழந்தைத் திருமணம் பற்றித் தகவல் தெரிந்தாலும் 1098 என்ற எண்ணுக்குத் தகவல் அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். பின்னர் போக்சோ சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பது குறித்து துண்டு பிரசுரங்களை பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் வழங்கினர்.