கிருஷ்ணகிரி, மார்ச் 1- சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியம் 7,850 வழங்க வேண்டும் என ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் துரை வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வேலை அறிக்கை யும், பொருளாளர் ஜெயச்சந்திரன் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநில துணைத் தலைவர் ஆர்.சங்கரி நன்றி கூறினார். சத்துணவு, அங்கன்வாடி ஊழி யர்கள், ஊராட்சி எழுத்தர்கள், உதவியாளர்கள் கிராம ஊழியர்கள், வனக் காவலர்கள் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள், பட்டு வளர்ச்சித் துறை தினக்கூலி ஊழியர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனைத்து அரசு துறை ஊழியர்களுக்கும் 7,850 ரூபாய் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்ச் இறுதியில் சென்னையில் சிறப்பு மாநாடு நடத்துவது என்றும், இதில் பங்கேற்க தமிழ்நாடு அமைச்சர்கள், அரசு ஊழியர், வருவாய்த்துறை ஊழியர், பிற தொழிற்சங்கத் தலை வர்களை அழைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.