கிருஷ்ணகிரி, நவ. 27- கிருஷ்ணகிரி காந்தி சாலையில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. கிருஷ்ணகிரி நகரின் மையத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவ மனையில் தினசரி 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். சர்க்கரை, ரத்த கொதிப்பு உள்ளிட்டவைகளுக்கு மாத்திரை, மருந்துகளும் இங்கேயே வழங்கப்பட்டு வந்தன. இதனால் கிருஷ்ணகிரி நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த வர்கள் எளிதில் வந்து சிகிச்சை பெற முடிந்தது. கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு சிகிச்சைகளாக குறைக்கப் பட்டு வந்த நிலையில் சனிக்கிழமை (நவ.26) மருத்துவமனை நுழை வாயில் பூட்டப்பட்டு தடுப்பு வைக்கப் பட்டது. இனி எந்த சிகிச்சைகளாக இருந்தாலும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும் என அங்கு இருந்தவர்கள் நோயாளிகளை திருப்பி அனுப்பினர். இதனால் அரசு மருத்துவமனைக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகை யில், கடந்த சில வாரங்களாகவே இந்த மருத்துவமனையில் மருத்து வர்கள் இருப்பதில்லை, சிகிச்சை அளிப்பதில்லை. ஆனாலும் நாங்கள் காத்திருந்து சிகிச்சை பெற்று வந்தோம். தற்போது 12 கி.மீ. தூரத்தில் உள்ள போலுப்பள்ளியில் இருக்கும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. அவசர சிகிச்சைக்கு வருபவர்களும், சி.டி.,ஸ்கேன், உள்ளிட்டவைக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் கிருஷ்ண கிரி டோல்கேட்டை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே வழக்கம் போல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையை செயல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.