கரூர், மே 6 - கரத்தாலும், கருத்தாலும் உழைக்கக் கூடிய மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க போராட்டங்களை திட்டமிடுவதற்கும், ஏழை-எளிய, உழைப்பாளி மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும், அவர்களின் கோரிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுதினமும் பலகட்ட போராட்டங்களை முன் நின்று நடத்தி வருகிறது. கட்சியின் குளித்தலை ஒன்றிய குழு சார்பில் பொதுமக்களின் பங்களிப்போடும், ஆதரவோடும் குளித்தலை சபாபதி நாடார் தெருவில் புதிதாக அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஒன்றிய குழு கட்டிட திறப்பு விழா மே 8 ஆம் தேதி மாலை 3 மணிக்கு குளித்தலையில் நடைபெற உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். மாலை நான்கு மணிக்கு செந்தொண்டர் பேரணி குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலையில் இருந்து துவங்கி சுங்ககேட்டில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் நிறைவு பெறுகிறது. மாலை 6 மணிக்கு சுங்ககேட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில குழு உறுப்பினர்கள் எஸ்.ஸ்ரீதர், எம்.ஜெயசீலன், கரூர் மாவட்டச் செயலாளர் எம்.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராஜூ, இரா.முத்துச்செல்வன், குளித்தலை ஒன்றிய செயலாளர் எஸ்.பிரபாகரன் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.