குமரியில் கல்லூரி மாணவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததுடன் நண்பர்களுக்கும் விருந்தாக்க முயற்சித்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் அருமனை அருகே 19 வயது இளம்பெண் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் ஏலச்சீட்டும் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் சீட்டு எடுத்தவர்கள் பணம் கட்டாததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் தோழிகள் மற்றும் கல்லூரி நண்பர்களிடம் உதவுமாறு கூறினார். அப்போது கல்லூரி நண்பர் ஒருவரின் உறவினரான அருமனையை சேர்ந்த ராணுவ வீரர் சுஜித்(30) என்பவர், மாணவிக்கு அறிமுகம் ஆனார். அவர் நான் பணம் தந்து உதவுகிறேன் என கூறி மாணவியுடன் பழகினார். செல்போனில் பேசியதில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில் ஒரு நாள் செல்போனில் பேசிக் கொண்டு இருக்கும் போது தனது ஆசைப்படி நடந்து கொள்ள வேண்டும் என சுஜித் கேட்டுக் கொண்டதால் அவரது விருப்பப்படியெல்லாம் வீடியோ காலில் மாணவி நடந்து கொண்டார். இதையடுத்து அவரை ஆபாசமாக படம் எடுத்து வீடியோ பதிவு செய்து கொண்ட சுஜித், இதை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என கூறி தனிமையில் அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் அவரது நண்பர்கள் மற்றொரு ராணுவ வீரர் உள்பட 3 பேர் மாணவியை, தங்களின் ஆசைக்கும் இணங்குமாறு மிரட்டினர். இதனால் அந்த மாணவி, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுஜித் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.