அரியலூர், டிச.18 - கைத்தறி நெசவாளர்களையும் நெசவு தொழிலையும் பாதுகாத்திட அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தொழிற்சங்க பேரவை கூட்டம் திருபுவனம் சம்மேளன கைத்தறி சங்கத் துணைத் தலைவர் என்.நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், சிஐடியு மாவட்டச் செயலாளர் துரைசாமி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாதர் சங்க மாவட்ட தலைவர் பி.பத்மாவதி, கைத்தறி சங்க மாவட்ட செயலாளர்கள் எஸ்.என்.துரைராஜ், குடிநீர் வடிகால் வாரிய சிஐடியு ஆர்.கோவிந்தராஜ், பொருளாளர் ஏ.ஜி.தங்கராசு, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்ட குழு உறுப்பினர் கௌரி, வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கைத்தறி நெசவாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 10 சதவீத கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நெசவாளர்களுக்கு போனஸ் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். கல்வி, திருமணம், இயற்கை மரணம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை இரண்டு மடங்காக உயர்த்தியும் கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்குவது போல அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கென பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்து குடிசை தொழில், கைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும். கைத்தறிக்கு பயன்படுத்தும் பட்டு நூல் மற்றும் கச்சா பொருள் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி மற்றும் இதர வரிகளை ரத்து செய்ய வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு குறைந்தபட்சக் கூலி மாதம் ரூ.20 ஆயிரம் கிடைக்க சட்டத்திருத்தம் செய்து அமல்படுத்த வேண்டும். நூல் பட்டு ஜரிகை ஆகியவற்றிற்கு மானியம் வழங்க வேண்டும். நெசவாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.