அரியலூர், ஜூன் 3- ஜெயங்கொண்டம் அருகே சுங்கச்சாவடி கட்டணம் 5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் மணகெதியில் உள்ள சுங்கச்சாவடி உள்ளிட்ட ஏழு சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருந்தது. அதற்குள் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திங்களன்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி அரியலூர் மாவட்டம் மணகெதியில் உள்ள சுங்கச்சாவடியில் ரூ.5 முதல் 20 வரை சங்க கட்டணமானது உயர்த்தப்பட்டுள்ளது.
கார் உள்ளிட்ட இலகுரக வாகனம் ஒருமுறை பயணிக்க 70 ரூபாயும், ஒரே நாளில் திரும்பி வரும் பயண கட்டணம் 110 ரூபாயும் என உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக வணிக வாகன வகை வாகனத்திற்கு ஒருமுறை சென்றுவர 115 ரூபாயும் ஒரே நாளில் திரும்பி வர 175 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் ஒருமுறை சென்று வர 385 ரூபாயும் ஒரே நாளில் திரும்பி வர 575 ரூபாயும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென உயர்த்தப்பட்ட சங்க கட்டண உயர்வால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.