court

img

ஜனாதிபதியின் கேள்விகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக விளக்கம் கேட்டு ஜனாதிபதி அனுப்பிய குறிப்பை திருப்பி அனுப்ப வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்ததற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். 3 மாதங்களுக்குள் முடிவெடுக்காத பட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என முதன்முறையாக ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்தது உச்சநீதிமன்றம். இதை தொடர்ந்து, ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பினார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு,  “குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் ஒரு வாரத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து, இந்த வழக்கை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த நிலையில், இதற்கு இன்று கேரள அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது. ஜனாதிபதி கேட்டுள்ள 14 கேள்விகளில் 11 கேள்விகளுக்கு தீர்ப்பிலேயே பதில் உள்ளது.
இந்தத் தீர்ப்பை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள், நீதிமன்ற தீர்ப்பை மறைமுகமாக ரத்து செய்ய முயல்வதாக இருக்கிறது. எனவே விளக்கம் கேட்டு ஜனாதிபதி அனுப்பிய குறிப்பை திருப்பி அனுப்ப வேண்டும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.