சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.
இந்த வழக்கில் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, இருவரும் குற்றவாளிகள் என டிச.19-ஆம் தேதி தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவருக்கும் தண்டனை விவரங்களையும் பிறப்பித்தார்.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி சார்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.