“வெள்ள நிவாரணம் உடனடி தேவை. அதை தாமதப்படுத்த முடியாது. தாமதப்படுத்துவது மக்கள் நலனுக்கு உகந்ததல்ல. வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம்” என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரொக்கமாக வழங்கப்படும் இந்த நிவாரணத் தொகையைச் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவரும், நிவாரணத் தொகையை அதிகரித்து வங்கிக் கணக்கில் வழங்க வேண்டும் எனச் சட்டக் கல்லூரி மாணவர் செல்வகுமார் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ரொக்கமாக நிவாரணத்தை வழங்கும்போது முறையானவர்களுக்குச் சென்றடையாது என்றும், கடந்த 2015-ஆம் ஆண்டு பெரு வெள்ளத்தின் நிவாரணத் தொகை வங்கிக் கணக்கில் தான் செலுத்தப்பட்டது என்றும், டோக்கன் முறை மூலம் நிவாரணம் வழங்குவது தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்றும், பலர் ஒரு முறைக்கு மேல் நிவாரணத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கூறி, அதனால் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்த உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.
அதற்கு அரசு தரப்பில், ஏற்கெனவே 37 லட்சம் குடும்பத்தினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், டோக்கன்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, வெள்ள நிவாரணம் என்பது உடனடியாக வழங்க வேண்டியது, ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நிவாரணம் வழங்குவதைத் தாமதப்படுத்த முடியாது. அதை மறுக்க முடியாது, நிவாரணத்தை முடக்க முடியாது என்று தெரிவித்தது.
மேலும் நிவாரணம் வழங்குவது தற்போதைய தருணத்தில் உடனடி தேவை என்பதால் இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை என்று நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
நிவாரணம் வழங்குவதைத் தாமதப்படுத்துவது மக்கள் நலனுக்கு உகந்ததல்ல என்றும், உண்மை பயனாளிகளுக்கு நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜனவரி 5-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
அன்றைய தினம் நிவாரணம் வழங்கியது குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.