வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து இன்று தீர்ப்பளித்துள்ளார்.
ஆளுநரிடம் அனுமதி வாங்காமல் அவைத்தலைவரிடம் விசாரணை நடத்த அனுமதி வாங்கியதால், சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளார்.
மேலும், மார்ச் 28ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில், அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராகி ரூ.1 லட்சத்துக்கு பிணைத்தொகை செலுத்தவும் வழக்கை விசாரிக்கத் தொடங்கிய பிறகு நாள்தோறும் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பாதுகாவலராக வேலை செய்த காவல்துறை அதிகாரி கணேசனுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு முறைகேடாக ஒதுக்கியதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2012-ஆம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக தற்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் ஐ.பெரியசாமிக்கு எதிராக, கடந்த 2012-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்தது.
வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை மீண்டும் விசாரணை நடத்தவும், சிறப்பு நீதிமன்றம் முறையாக ஒப்புதல் பெற்று வழக்கை மீண்டும் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.