தனது மனைவியை கிண்டல் செய்த நடிகரை ஆஸ்கர் மேடையிலேயே நடிகர் வில் ஸ்மித் அறைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பிரபல டென்னிஸ் விளையாட்டு வீராங்கனைகளான வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் செரினா வில்லியம்ஸ் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட கிங் ரிச்சர்ட் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் வில் ஸ்மித்திற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
முன்னதாக சிறந்த ஆவணப்படத்திற்காக விருதை வழங்கும்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நகைச்சுவை நடிகரும், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான கிறிஸ் ராக், வில் ஸ்மித், அவரது மகன் ஜேடன் ஸ்மித் மற்றும் அவரது மனைவி குறித்து கிண்டலாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர், ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் தலைமுடியைக் கிண்டலடித்துப் பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த வில் ஸ்மித் உடனே மேடைக்குச் சென்று கிறிஸ் ராக்கின் கண்ணத்தில் ஓங்கி அறைந்தார். இதைப்பார்த்த சக நடிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
முதலில் இது நகைச்சுவைக்காக நடத்தப்பட்ட நாடகம் என பார்வையாளர்கள் நினைத்துள்ளனர். ஆனால், வில் ஸ்மித் மேடையிலிருந்து தனது இருக்கைக்கு வந்த பிறகும், என் மனைவியின் பெயரைச் சொல்வதை நிறுத்துங்கள் என கோபத்துடன் சத்தமாகக் கூறினார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
ஜடா பிங்கெட் ஸ்மித் அலோபீசியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனாலேயே தனது தலைமுடியை அவர் வெட்டியதாக 2018 ஆம் ஆண்டு பகிரங்கமாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.