ஜூட் அந்தனி ஜோசப் இயக்கியுள்ள மலையாளத் திரைப்படம் 2018. டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். கேரளா சந்தித்த பெருவெள்ளப் பேரிடரை மையமாகக் கொண்ட இந்தப் படம்தான் மலையாளத் திரையுலக வரலாற்றில் முதன்முதலில் 150 கோடி ரூபாயை வசூலித்த படம் என்ற பெயரினைப் பெற்றிருக்கிறது. வெளியான முதல் 11 நாட்களிலேயே 100 கோடியை வசூலித்த இந்தப் படத்தின் 23 வது நாளில் 150 கோடியை எட்டியிருக்கிறது. வெறும் வெள்ளப் பேரிடர்க் காட்சிகளை பிரம்மாண்ட மாகக் காட்டுவதோடு அல்லாமல் சாதி, மதம் கடந்த மனித நேயம் அந்த அபாய காலத்தில் எப்படியெல்லாம் வெளிப்பட்டது என்பதைச் சொல்லி மனித மாண்புகளுக்கு மகுடம் சூட்டியிருக்கிறது இந்த 2018 மலையாள சினிமா. தற்போது தமிழிலும் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி தெலுங்கில் ஒரு கோடியைத் தாண்டியிருக்கிறது வசூல். தவறான கருத்தியலைச் சொன்ன தி கேரளா ஸ்டோரியை நிராகரித்த கேரள ரசிகர்கள் சரியான மனித நேயத்தைச் சொன்ன இந்தக் கலைப்படைப்பைப் பெரிதும் வரவேற்றிருப்பது அவர்களின் ரசனையின் முதிர்ச்சியை வெளிப்படுத்துவதாக உள்ளதென்று திரையுலக அறிஞர்கள் கூறியுள்ளனர்.