cinema

img

என் மனைவி தரமான நகைச்சுவை சினிமாக்களுக்குத் தடமிட்ட படம்...

அந்தநாளில் நகைச்சுவையில் ஒரு கலக்குக் கலக்கிய தமிழ்த் திரைப்படமான சபாபதியின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கு மறுபடியும் ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தை உருவாக்கும் ஆசை ஏற்பட்டது.  ‘‘என் மனைவி’’ (1942) என்ற படத்தை எடுக்க முடிவு செய்தார். சம்ஷே கொல்லி என்ற மராத்திய நாடகம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த என் மனைவி. அந்த மராத்திய நாடகமே ஃபிரஞ்சு நாடக எழுத்தாளர் மோலியர் எழுதிய கதையொன்றைத் தழுவியதுதான்.  நல்ல நோக்கத்துடன் செயல்படும் ஒரு கணவன், சயதேகப்பிராணியான மனைவி, விளையாட்டுத்தனமான பணக்கார ஜோக் பேர்வழியான ஒரு இளைஞன் என்று உருவாக்கப்பட்ட பாத்திரப்படைப்புகளைச் சுற்றிச் சுழலும் கதை. இவர்களுக்கிடையே ஏற்படும் சிக்கல்களும் சம்பவங்களுமே நகைச்சுவைக்கான களமாக அமைந்தன. பெங்களூருவில் சூர்யா ஃபிலிம்ஸ் எனும் நிறுவனம் பேசாப்பட காலத்தில் இருந்தது. அதில் ஒரு நடிகராகப்போய்ச் சேர்ந்தார் சுயதர் ராவ் நட்கர்ணி. மெல்ல மெல்ல படப்பிடிப்புக் கேமராவை இயக்கக் கற்றுக்கொண்டார்.

படத்தொகுப்புக் கலையைக் கற்றார். திரைப்படத்தை இயக்கும் நுட்பங்களைக் கற்றார். தேர்ந்த தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். பேசாப்பட காலத்திலேயே அவர் இயக்கத்தில் பல படங்கள் வந்தன. சினிமாகலையின் நுட்பங்களை அவர் மும்பையில் வாழ்ந்த காலத்தில் மேலும் அறிந்துகொண்டார்.  மும்பையில் வாழ்ந்த காலம் அவருக்கு மராத்திய நாடகத்தை - சினிமாவை இன்னும் அருகிருந்து அறிய வாய்ப்பாக இருந்தது. அந்தத் தாக்கத்தினால்தான் அவர் என் மனைவி படத்தை எடுக்க முடிவுசெய்தார். என் மனைவியின் நாயகனாக கே.சாரங்கபாணி நடித்தார். தனது தேர்ந்த நடிப்பால் பல படங்களிலும் பலவிதமான பாத்திரங்களில் திறம்பட நடித்துப் பேர்வாங்கியவர் சாரங்கபாணி. ‘‘என் மனைவி’’யில் அவர் ஒரு வைத்தியர். தன் அழகிய இளம் மனைவியின் கண்களுக்கு எப்போதும் சந்தேகத்துக்குரிய கணவர்.  அவரது மனைவியாக மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையாக கே.ஆர்.செல்லம் நடித்தார். சாரங்கபாணி - செல்லம் இணை இந்தப் படத்தைத் தொடர்ந்து ஒரு வெற்றிகரமான நகைச்சுவை ஜோடியாகத் தமிழ் சினிமாவில் வலம் வந்தது. நாகர்கோவில் மகாதேவன் கர்நாடக இசையில் தேர்ச்சிபெற்றவர். பல புராணப்படங்களில் நாரதர் வேடமேற்று அந்தப் பாத்திரமாகவே அறியப்பட்டவர். அதனால் நாரதர் மகாதேவன் என்றே பெயர் பெற்றவர். ஆனால், இந்த என் மனைவியில் அவர் ஒரு இளம் விளையாட்டுப்பிள்ளை. மிடுக்காக உடையணிந்து கொண்டு, பெண்களை நாடும் இளம் வாலிபராகத் தோன்றினார்.

வயலின் வாத்தியக்கலைஞரான நெல்லூர் நடேசம் என்பவர் ஒரு நாடகக் கலைஞரும்கூட. அவர் இந்தப் படத்தில் தீவிரமான இசைக் காதல் கொண்ட ஒரு சமையல்காரர் வேடத்தில் நடித்தார். படத்தில் சமையல் செய்வதுபோக ஓய்வு நேரங்களில் பாடிக்கொண்டும், வயலின் வாசித்துக் கொண்டுமிருப்பார் நடேசம்.  அவருக்கு ஒரு பாகவதராகி வானொலியில் பாடவேண்டும் என்பதாக ஒரு ஆசைக் கனவிருக்கும். இப்படியானதொரு நேர்த்தியான நகைச்சுவைப் பாத்திரத்திற்குப் படத்தில் ஒரு பாடலும் வைக்கப்பட்டது. ‘‘சங்கடமான சமையலைவிட்டு சங்கீதம் பாடப் போறேன்’’... - என்று பாடுவார் அவர்.  அந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. படம் வெளிவந்த காலத்தில் எல்லோரும் முணுமுணுக்கும் பாடலானது. இந்த நகைச்சுவைப் பாடல் பற்றிய ஒரு நகைச்சுவைச் செய்தியும் உண்டு. இதுவும் கலைவாணரின் பாடல்தான் என்று தவறாகக் கருதி கலைவாணரும் மதுரமும் பாடிய பாடல்களோடு இந்தப் பாடலையும் சேர்த்துவிட்டார்கள் கேசட் தயாரிப்பாளர்கள்.  கலைவாணருக்கும் இந்தப் பாடலுக்கும் இந்தப் படத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லாத நிலையிலும். இந்த விந்தையை என்னவென்பது?

அந்த நாளில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அருகில் இருந்தது ஹைகோர்ட் பீச் எனும் கடற்கரை. அது 1950 வாக்கில் துறைமுக விரிவாக்கத்தால் மறைந்துபோனது. அந்தக் கடற்கரையில் முதன்முதலாக ஒரு உயரமான இரும்புக் கம்பத்தின் உச்சியில் இருபுறமும் பெரிய குழாய்வடிவ லௌட் ஸ்பீக்கர்களைப் பொருத்தி மாலை நேரங்களில் வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பினார்கள்.  அதனைக் கேட்க அங்கே பெருங்கூட்டம் கூடுவது வழக்கமானது. பேசுகிற, பாடுகிற அதை மாயக்கம்பம் என்றே அழைத்து வியந்து மகிழ்ந்தார்கள் மக்கள். இதை இந்தப் படத்தில் “பட்டணத்தைப் பார்க்கப் பார்க்கப் பசியெடுக்கலையே...” - என்று தொடங்கும் ஒரு நகைச்சுவைப் பாடலில் இப்படியொரு வரியின் மூலம் பதிவு செய்தார்கள்.

“சாயங்கால நேரத்திலே சமுத்திரக்கரை ஓரத்திலே 
மாயமான கம்பம் ஒண்ணு மனுசன்போல பாடுதய்யா...”

இந்தப் பாடலை அந்நாளில் ‘லக்ஸ் அழகி’ என்றழைக்கப்பட்டுப் பிரபலமான ஆர்.பத்மா பாடினார். இந்தப் பாடல் உள்ளிட்ட படத்தில் இடம்பெற்ற 12 பாடல்களையும் டி.கே.சுந்தரவாத்தியார் எழுதினார். சரஸ்வதி ஸ்டோர் வாத்தியக்குழுவினர் இசை. இந்தப் படத்தில் காட்டப்பட்ட மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய ராஜகோபுரத்தைப் பார்த்துப் பரவசமான ரசிகர்கள் பக்தியோடு கன்னத்தில் போட்டுக்கொண்டார்களாம். இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த நேரம் அது. எந்த நேரத்திலும் ஜப்பானின் குண்டு சென்னையில் விழலாம் என்கிற நிலை. சினிமாவைத் தயாரிக்கிற சூழலே அற்றுப்போயிருந்த நேரத்திலும் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தனது செயலே மூச்சென இருந்தார்.  அதனால் இதுபோன்ற படங்கள் நெருக்கடியிலும் ரசிகர்களை ஆசுவாசப்படுத்தின என்பதே உண்மை. நயமான நகைச்சுவையாலும் இனிய பாடல்களாலும் பார்வையாளர்களை மகிழ்வித்த இந்த என் மனைவி ரசிகர்களை ஏமாற்றவில்லை.