cinema

img

தெலுங்கின் முத்திரைக் கலைஞர் கிருஷ்ணா...

தெலுங்கு சூப்பர் ஸ்டார், நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். தெலுங்கு மொழி சினிமாவில் பல புதுமைகளை அறிமுகப்படுத்திய முன்னோடி என்று அவரை நம் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். ஆமாம், தெலுங்குத்திரைப்படங்களில் முதல் ஈஸ்ட்மென் வண்ணப்படம் ஈநாடு (1982), முதல் சினிமாஸ்கோப் படம் அல்லூரி சீத்தாராம ராஜூ (1974), முதல் 70 எம்.எம். படம் சிம்ஹாசனம் (1986) மற்றும்  முதல் டிடிஎஸ் தொழில்நுட்பப் படம் உள்ளிட்ட பல சாதனை முதல்படங்களைத் தயாரித்து வியப்புக்குரிய பெருமையைப் பெற்றவர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா.  தெலுங்குபட உலகின் ஜேம்ஸ்பாண்ட் என்று அறியப்பட்ட கிருஷ்ணாவின் மகன் மகேஷ்பாபு பிரபல நடிகர். கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த சங்காரவம், முகுரு கொடுக்கலு, கொடுக்கு தீதினாகபுரம், பாலா சந்த்ரடு, அண்ணா தம்முடு போன்ற படங்களில் அவரின் மகன் மகேஷ்பாபு முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். பத்மாலயா ஃபிலிம்ஸ் என்ற பெயரில் கிருஷ்ணா சொந்தமாகத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்திவந்தார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தெலுங்குப்பட உலகில் முத்திரைக் கலைஞர் 79 வயது கிருஷ்ணா சிகிச்சை பலனின்றி காலமானார்.