விசித்திரமான புதிர்நிறைந்த கதையமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டுவரும் ஹாலிவுட் படம்தான் “பேர்ட்’ஸ் ஐ விட்னஸ்”. எல்டர்வுட் எனும் நகரில் வசிக்கும் ரண்டி என்பவர் நட்டத்தில் இயங்கிவரும் பிணவறை ஒன்றின் உரிமையாளராவார். தனது தொழிலைக் காத்துக்கொள்ளவும் தனது குடும்பத்தைக் காப்பாற்றவும் முதியோர் இல்லத்தில் கொலைமுயற்சியில் ஈடுபடுகிறார். அவரது மனைவிக்கு இது தெரியவருகிறது. அதனைத் தொடர்ந்து ரண்டி சட்டத்தின் பிடியில் சிக்குகிறார். திருப்பங்களும் முடிச்சுகளுமாக இப்படிப்போகிறது கதை. முற்றிலும் மாறுபட்டதொரு திரைப்படம் என்கிறார்கள் படக்குழுவினர். கதை, வசனம், இயக்கம் கிறிஸ்டோபர் வினான். மனித இயல்பின் இருண்ட பக்கத்தை ஆய்வுக்கு உட்படுத்தி நகைச்சுவையோடு கதை சொல்லியிருப்ப தாக அவர் கூறுகிறார். இதில் நடித்துள்ள அனைவரும் தங்களது தனித்தன்மையை நன்றாக வெளிப்படுத்தியிருப்பதாகவும் இயக்குநர் கூறுகிறார். இதில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட எரிக் ராபர்ட், இணையப் புகழ் இவான் பிரீன், நடிகை கேத்லீன் கின்மோன்ட் உள்ளிட்ட பலரும் நடித்துள் ளார்கள். மிகவும் முக்கியமாக இலங்கைத் தமிழரும், திரைக் கலைஞருமான சுகிர் பொன்னுச்சாமி மிகவும் சிறப்பானதொரு பாத்திரத்தில் மிகவும் யதார்த்தபாணியில் திறம்பட நடித்துள்ளார். இந்தச் செய்தி இலங்கைத் தமிழர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த செலவில் படமாகி வரும் இந்த பேர்ட்’ஸ் ஐ விட்னஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மார்ச் மாதம் நிறைவடைகிறதாம்.