பழம்பெரும் இந்தி சினிமா இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர் நந்த்லால் ஜஸ்வந்த்லால் (1907 - 1961). அவர் ஒரு தயாரிப்பாளரும் ஆவார். துவக்க கால இந்திய சினிமாவில் பல்வேறு புதுமைகளை முயன்றுபார்த்த முன்னோடிக் கலைஞர் இந்த ஜஸ்வந்த்லால். அவர் இயக்கத்தில் சக்கைபோடு போட்டவைதான் அந்த நாளின் அனார்கலி மற்றும் நாகின் போன்ற படங்கள். தனது படங்களில் அவரது காட்சி உருவாக்கப் புதுமைகளுக்காகவே ரசிகர்கள் அவரை வியந்து பாராட்டினார்கள். தனித்துவமான சினிமா உருவாக்குநராக அவர் புகழப்பட்டார். அந்தக் காலத்தில் ஒரு காட்சியானது குறைந்தது 100 முதல் 200 அடிகள் வரை தொடர்ந்து ஓடக்கூடியதாக இருந்தது. ஆனால், அப்போதே ஜஸ்வந்த்லால் தனது திரைப்படங்களில் காட்சிகளை வெறும் ஆறு முதல் பத்து அடிவரை மட்டுமே ஓடக்கூடியதாக எடுத்தார். அதனால் விரைவான வெட்டுக்களால் காட்சிகள் மாறுபட்ட கோணங்களில் மாறிமாறிப் புதுமை சுமந்து வந்தன. அப்படியான முயற்சியால் கேமரா கோணங்களும் ஒளியமைப்பும் கூடுதலாகப் புதுப்பொலிவைச் சுமந்து வந்தன. இந்தக் காலத்தில் அப்படியான காட்சிகள் சர்வசாதாரணமாக இருக்கலாம். ஆனால், அப்போதே இப்படியான முயற்சிகள் காலத்தை மீறிய அவரது தொலைநோக்கு என வியந்து புகழப்பட்டன.
அவர் நிறைய இந்திப் படங்களை இயக்கியிருக்கிறார். அவர் தயாரித்த ஒரே தமிழ்ப் படம் காமதேனு (1941). அந்தப் படத்தை இயக்குவதற்காக 1940-களில் அவரைச் சென்னைக்கு அழைத்துவந்தவர் அந்தநாளின் புதுமை இயக்குநர் கே.சுப்ரமணியம். கூவத்தின் மறுபுறத்தில் கெய்ட்டி திரையரங்கின் அருகில் இருந்தது சித்ரா டாக்கீஸ். கே.சுப்ரமணியத்தின் சகோதரர் கே.விஸ்வநாதன் அதனை நடத்திவந்தார். அதில் பெரும்பாலும் தமிழ்ப் படங்களே திரையிடப்பட்டு வந்தன. 1970-களில் சரோஜா ராமாமிர்தம் என்று அறியப்பட்ட பேபி சரோஜா இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக வலம்வந்த குழந்தை நட்சத்திரமாவார். கே.விஸ்வநாதனின் மகள்தான் பேபி சரோஜா. கே.சுப்ரமணியம் இயக்கிய பாலயோகினி, தியாகபூமி போன்ற படங்களில் சரோஜாவின் நடிப்பை அந் நாளைய ரசிகர்கள் எப்போதும் நினைவில் வைத்திருந்தார்கள். காமதேனுவில் சரோஜாவின் அம்மா வத்சலா கதாநாயகியாக நடித்தார். அவரது அப்பா விஸ்வநாதன்தான் கதாநாயகன். படத்திற்காகத் தனது பெயரை அவர் கே.பி.வத்சல் என்று வைத்துக்கொண்டார். இவர்களது மகள் சரோஜா படத்திலும் இவர்களின் மகளாக நடித்தார். அதாவது, அசல் அப்பா, அம்மா, மகள் ஆகிய மூவரும் படத்திலும் அந்தப்படியாகவே நடித்த ஒரே படம் இது.
காதல் என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை வெல்லும் வல்லமை படைத்தது என்பதைச் சொல்வதாக இந்தக் காமதேனு படத்தின் கதை இருந்தது. அது சிக்கல்கள் நிறைந்த ஒரு குடும்பக் கதை. அது பல திருப்பங்களைக் கொண்டதாக இருந்தது. பணக்காரவீட்டு கதாநாயகன் ஏழையின் மகளைக் காதலிக்கிறான். அதனால் அந்த இளைஞன் தனது தந்தையின் வெறுப்புக்கு உள்ளாகிறான். அப்படியானதொரு சூழலைத் தனது கெட்ட எண்ணத்திற்குச் சாதகமாக இன்னொருவன் பயன்படுத்திக்கொள்கிறான். இதனால் அந்தக் குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகின்றன. எது எப்படிப் போனாலும் இறுதியில் அவர்களின் உண்மைக் காதல் வெற்றிபெறுகிறது. ஜெமினி தயாரித்த அபூர்வ சகோதரர்கள் (1949) ஒரு மிகப்பெரிய வெற்றிப்படம். அதில் இரட்டைக் குழந்தைகளைப் பிரிக்கும் மருத்துவராக சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனங்களில் நின்றவர் பட்டு ஐயர் என்பவர். கே.சுப்ரமணியத்தின் துவக்ககால முயற்சிகள் அனைத்திலும் அவருடன் தோள் கொடுத்தவர் இந்தப் பட்டு ஐயர். அவர் இந்த காமதேனுவில் முக்கியப் பாத்திரத்தில் நடித்தார். அதேபோல கே.சுப்ரமணியம் இயக்கிய பக்த சேத்தா படத்தில் நடித்த நட்சத்திர நடிகையான ஜி.சுப்புலட்சுமி இந்தப் படத்தில் வில்லனை மணக்கும் பெண் பாத்திரத்தில் நடித்தார். அதுமட்டுமல்லாமல், பின்னாளில் ஒரு பன்முகத் திறன் கொண்ட கலைஞராக மிளிர்ந்த வீணை எஸ்.பாலசந்தர் இந்தப் படத்தில் பேபி சரோஜாவின் நண்பனாக நடித்தார். அப்போது அவருக்கு 14 வயது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பா, அம்மா, குழந்தை ஆகிய மூவரும் நடித்திருப்பதால் படத்திற்கு அதுவே ஒரு பெரிய விளம்பரத்தைத் தந்தது. அத்துடன் நந்த்லால் ஜஸ்வந்த்லால் அந்தநாளிலேயே புதுமை உத்திகளோடு மிகச் சிறப்பாக இந்த காமதேனுவை இயக்கியிருந்தார். இது காதலின் வெற்றியைப் புதுமை உத்திகளோடு சொன்ன முதல் படம் என்று பெயர் வாங்கியது. இப்படியான காரணங்களால் படம் தமிழ் ரசிகர்களை ஓரளவு கவர்ந்தது.