cinema

img

வாலிபர் சங்கம் கருப்பு-வெள்ளை காலத்திலேயே காதலுக்கு மரியாதை செய்த படம்

இன்று - நேற்றல்ல... அந்தத் தமிழ்ப்படம் வெளிவந்தது 1938 ஆம் ஆண்டில். அதாவது, இன்றைக்கு 84 ஆண்டுகளுக்கும் முன்பு. சினிமா பேசத் தொடங்கி ஏழே ஆண்டுகளில் இப்படியொரு சமுதாயப் புரட்சிக் கருத்தைத் தாங்கிய திரைப்படமா என்று இப்போதுகூட நம்மை வியக்க வைப்பது அது. அதனைத் தயாரித்தது சாகர் மூவிடோன் கம்பெனி எனும் பட நிறுவனம். அதன் போஸ்டரிலேயே முதல் சமூகத் தமிழ்ப் பேசும்படம் என்று போட்டிருந்தார்கள். ஆனால் அதற்கு நான்கு ஆண்டுகளுக்கும் முன்னமே ராஜா சாண்டோவின் மேனகா எனும் படம் புராணத்துக்கு பதிலாக சமூகக் கதையாடலைக் கையாண்டுவிட்டது. இருந்தாலும், இந்தப் படத்தை அப்படிப் பெருமையோடு அவர்கள் விளம்பரப்படுத்த என்ன சிறப்பான காரணம் இருந்திருக்கும்?  கல்வி கற்ற இளைஞர்களில் சிலர் அந்த நாளிலேயே நவீன சிந்தனைப்போக்குகள் கொண்டவர்களாக உருவானதன் ஒரு முக்கியமான அடையாளமாக நம் சமூகத்தில் புரையோடிப்போன பழைய வழக்கங்களின்மீது அவர்கள் கொண்டிருந்த கடுமையான விமர்சனங்களையே சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக, திருமண விசயத்தில் பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்கிற திருமணத்திற்கு எதிரான கருத்துக்கள் அந்நாளிலேயே சில இளைஞர்களின் மனங்களில் தோன்றத்தொடங்கிவிட்டதன் அடையாளம்தான் இந்த வாலிபர் சங்கம் திரைப்படம். ஆங்கிலத்தில் இதனை யூத் லீக் என்றும் போட்டிருந்தார்கள். இதன் கதைச் சுருக்கத்தைச் சொல்கிறது இந்தப் படத்தின் பாட்டுப் புத்தகம். அதில் கூறப்பட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும். இதோ இப்படித் தொடங்குகிறது அது: “நம் வாழ்க்கையிலுள்ள பழைய பழக்க வழக்கங்களை மாற்றி, புதிய சட்ட திட்டங்களை ஏற்படுத்த வாலிபர்கள் செய்த கிளர்ச்சியும், அதன் முடிவுமே வாலிபர் சங்கம் எனும் கதையின் சாராம்சம்!” 

சுந்தரம் - கமலா இருவரும் நன்கு படித்த இளைஞர்கள். நல்ல நண்பர்கள். இவர்களின் பெற்றோர் இந்த இருவருக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற முடிவிலிருந்தார்கள். ஆனால், பெற்றோர் பார்த்துத் திருமணம் செய்துகொள்கிற பழைய வழக்கத்திற்கு எதிரான கருத்தைக் கொண்டவர்கள் அந்த இருவரும். சாதி, மத வேற்றுமைகளற்ற காதல் திருமணமே சிறந்தது என்று கருதுகின்றார்கள். ஆணும் - பெண்ணும் ஒருவருக்கொருவர் விரும்பியே திருமணம் செய்துகொள்ள வேண்டும். பெற்றோர்கள் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணத்தை ஏற்கக் கூடாது என்ற கொள்கைக்காகவே அவர்கள் வாலிபர் சங்கம் என்ற ஒரு அமைப்பைத்  தொடங்குகிறார்கள். காதலித்தே திருமணம் செய்துகொள்ள வேண்டும். மாறாக, திருமணத்திற்குப் பின் காதல் என்பது செயற்கையானது என்று கருதுகிறார்கள் அவர்கள். “நமது சமூக வாழ்க்கையில் தற்போதுள்ள விவாகப் பழக்க வழக்கங்களை மாற்றி, புதிய சட்டதிட்டங்களை ஏற்படுத்த வேண்டும். காதலாகிப் பின்னர் மாலையிடுவதே இல்லற வாழ்க்கையின் இன்பம். மணமான பின்னர் காதல் ஏற்படுவது துர்லபம். காதலே மணத்திற்கு ஆதாரம். மணம் காதலுக்கு ஆதாரமாகாது. ஆகையால் ஒவ்வொருவதும் தம்தம் இஷ்டப்படி மணம் செய்துகொள்ள வேண்டும். பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மணம் செய்துகொள்ளக் கூடாது.” இதுதான் அவர்கள் தொடங்கிய வாலிபர் சங்கத்தின் கொள்கைப் பிரகடனமாம். எத்தனை தீர்க்கமான நவீன சிந்தனை! துவக்க நாளின் தமிழ் சினிமா இப்படியும் பேசியிருக்கிறது என்பது உண்மையிலேயே வியப்பாக உள்ளதல்லவா?  

நினைத்துக்கூடப் பார்க்க முடியாத இப்படியொரு கதையை அந்த நாளிலேயே ஒரு திரைப்படமாக எடுத்ததற்கு எதிர்ப்புகளும் தோன்றாமலில்லை. ஆனாலும் துணிச்சலோடு இப்படியொரு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கதையில் நிறையச் சிக்கலான முடிச்சுக்கள் இருந்தன. சுந்தரமும் கமலாவும் வாலிபர் சங்கத்தை இளைஞர்கள் மத்தியில் வெற்றிகரமாகக் கொண்டு செல்கிறார்கள். அந்தப் பணிகளைச் சேர்ந்து செய்துவந்ததன் விளைவாக அவர்களுக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்பட்டு அதுவே காதலாக மலர்கிறது. ஆனால், அதற்கு முன்பே தங்களது பெற்றோர் தங்களின் திருமணம் தொடர்பாகக் கலந்து பேசியிருப்பதால் வாலிபர் சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு அவர்களின் திருமணம் எதிராக இருப்பதாகக் கருதுகிறார்கள். பெற்றோர் விரும்பியதால் அதை ஏற்பாட்டுத் திருமணம் என்று கருதி இணையாமல் இருப்பதா அல்லது தங்களுக்குள் அரும்பிய காதலுக்கு மரியாதை தந்து தங்களின் கொள்கைக்கு ஏற்புடையதென்று கருதி இணைவதா? இந்தக் குழப்பத்தைத் தீர்த்துவைப்பதே படத்தின் நிறைவுப் பகுதி.  அவர்களின் பெற்றோரின் நிலங்கள் அருகருகே இருக்கின்றன. அதன் இடையே போடப்பட்டுள்ள வேலியொன்றை யார் செலவில் பராமரிப்பது, அதனிடையே கதவு ஒன்றை யார் செலவில் வைப்பது போன்ற முரண்பாடுகள் சண்டையாக நீண்டகாலம் தொடர்கிறது. படத்தின் இறுதியில் நாயகனின் தங்கை ருக்மணி அந்த வேலியே தேவையற்றது என்று சொல்லி சண்டைக்குத் தீர்வுகாண்கிறாள். எல்லா முரண்பாடுகளும் மறைவதன் குறியீடாக வேலி அகற்றப்படுகிறது. தாங்கள் இணைவதற்கு இடையூறான கொள்கையைக் கொண்டிருக்கும் வாலிபர் சங்கத்தைக் கலைத்துவிட்டு காதலர்கள் இணைகிறார்கள். 

இப்படியானதொரு கதையே புதுமையான உள்ளடக்கம் கொண்டதுதான். ஆனால், அன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின்மை காரணமாக படம் ஒருவேளை நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்காமல் போயிருக்கலாம். அதனால் என்ன? காலத்திற்கேற்ற முற்றிலும் புதியதொரு கதையாடலைக் கொண்டிருந்ததாலேயே இந்த வாலிபர் சங்கம் படத்திற்காக நாம் பெருமையே படவேண்டும். படத்தில் மாதிரிமங்கலம் நடேசய்யர், சுபத்ரா, லட்சுமணன், ருக்குமணி, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். ரஜ்னிகாந்த் பாண்ட்யா ஒளிப்பதிவு மேற்கொள்ள, எஸ்.சி.பாடில் ஒலிப்பதிவு செய்தார். இசையில் பி.எஸ்.அனந்தராமன் உதவினார். படத்தில் மொத்தம் 15 பாடல்கள். பிரபல நடனக் கலைஞர் குமாரி கமலாவுக்கு இதுதான் முதல் படம். கதை, வசனம், பாடல்கள், இசை மற்றும் இயக்கம் ஏ.என்.கல்யாணசுந்தரம் எம்.ஏ.முற்றிலும் மாறுபட்ட நவீன சிந்தனையைக் கொண்ட கதையாடலுக்காக இந்த வாலிபர் சங்கம் மறக்கமுடியாத தமிழ் படம்தானே?