தனியொரு மனிதராகத் திரைப்படத்துறை குறித்த வரலாற்று ஆய்வுகளையும் அதன் பலனாக எண்ணற்ற எழுத்துசார் பதிவுகளையும் இன்றைய நமக்கும் எதிர்கால சந்ததிக்கும் வழங்கியிருப்பவர் பெருமைக்குரிய திரைப்பட ஆய்வறிஞர் ராண்டார் கை. மாதபூஷி ரங்கதுரை எனும் இயற்பெயர் கொண்ட ராண்டார் கை அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். எழுத்தின்மீது கொண்டிருந்த பெருவிருப்பத்தால் சட்ட வரலாற்றாளராகவும் திரைப்பட ஆய்வாளராகவும் தன்னை உயர்த்திக்கொண்டு இந்து ஆங்கில இதழ் உள்ளிட்ட பல பத்திரிகைகளிலும் எழுதிவந்தார். சிறுவயதிலேயே நாடகங்களை எழுதியும், நாடகங்களில் நடித்தும் வந்த ராண்டார் கை 1976 முதலே எழுத்துத்துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். அவர் எழுதிய அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் ஃபிராங்க் காப்ரா குறித்த கட்டுரையை அமெரிக்காவின் செய்தி நிறுவனம் (உசாத்துணையாக) அடிப்படை தரவுகளாக வாங்கியது. அமெரிக்க அரசாங்கத்தால் அடிப்படை தரவுகளாக்கப்பட்ட படைப்புகளை எழுதிய அமெரிக்கரல்லாத ஒரே எழுத்தாளர் ராண்டார் கை மட்டுமே. ஹாலிவுட் நிறுவனத்திற்காக தி பெர்ஃபியூம்டு கார்டன் என்ற ஆங்கிலத் திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். அது பிரம்மச்சாரி என்று தமிழ், தெலுங்கு, இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. மாயா என்ற நமீதா நடிக்கும் முதல் ஆங்கிலப் படத்திற்குத் திரைக்கதை எழுதிவரும் நிலையில் வயது மூப்பின் காரணமாக இந்த ஏப்ரல் 23 அன்று தனது 85 வது வயதில் காலமானார் திரைத்துறை வரலாறு குறித்து அரிய பதிவுகள் பல செய்துள்ள சிறப்புமிக்க எழுத்தாளர் ராண்டார் கை.