cinema

img

மெல்லிசை மன்னருக்கு நினைவிடம் அமைக்கும் கேரள அரசு - சோழ. நாகராஜன்

தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்தியத் திரைவானில் நெடுங்காலமாக பெரும் இசைப் பிரவாகத்தையே ஏற்படுத்தியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவர் பிறந்த கேரள மாநிலம் பாலக்காடு அருகிலுள்ள எலப்புள்ளி கிராமத்தில் அவருக்கு நினைவிடம் ஒன்றை எழுப்ப முடிவு செய்து கேரள அரசு தனது இந்த ஆண்டின் பட்ஜெட்டில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 1928 ஆம் ஆண்டு எலப்புள்ளியில் பிறந்த விஸ்வநாதன் நான்கு வயதிலேயே தந்தையை இழந்தவ ராவார். கண்ணூரில் தனது தாத்தாவின் வீட்டில் வளர்ந்தவர் சிறுவயதிலேயே திரையரங்குகளில் சிற்றுண்டி விற்பவராகப் பணி செய்துகொண்டே நீலகண்ட பாகவதர் என்பவரிடம் இசை பயின்றார்.  தனது 13 வயதில் மேடைக் கச்சேரிகள்  செய்தவர் பின்னாளில் திரைப்பட நிறுவனங்களில் உணவு பரிமாறுபவராகவும் வேலை செய்திருக்கிறார். பிரபல இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் குழுவில்   ஆர்மோனியக் கலைஞராகப் பணியில் சேர்ந்தார். அப்போது அங்கே டி.கே.ராமமூர்த்தி வயலின் கலைஞராகப் பணியாற்றினார். பின்னாளில் இருவரும் இணைந்து ஒரு மாபெரும் இசைச் சாம்ராஜ்ஜியத்தையே கட்டியெழுப்பி னார்கள்.  1953 ல் முதன்முதலில் ஜெனோவா திரைப்படத்திற்கு இசையமைத்த விஸ்வநாதன் கடந்த 2015 ஆம் ஆண்டு மறைந்தார். அவருக்கொரு நினைவில்லம் கட்டப்படுவதை அறிந்த தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் பெருமகிழ்வை வெளிப்படுத்தி வருகிறார்கள்.