cinema

img

திரைக்கதிர் - சோழ. நாகராஜன்

கதாநாயகி கிடையாது...

இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கியுள்ள புதிய படம் ‘தி பாய்ஸ்’. ‘கஜினிகாந்த்’, ‘பொய்க்கால் குதிரை’  உட்பட சில படங்களை இயக்கியுள்ளவர் சந்தோஷ். இந்தப் படத்தில் அவரும் நடித்துள்ளார். ‘ஜெயிலர்’ ஹர்ஷத், வினோத், ஷா ரா, யுவராஜ் உட்பட பலரும் நடிக்கிறார்கள். அஹமத் ஷெரிப் ஒளிப்பதிவு. அருண் மற்றும் கௌதம் இசை. நோவா ஃபிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் செந்தில்குமாரும் சந்தோஷ் பி. ஜெயக்குமாரின் டார்க் ரூம் பிக்சர்ஸும் சேர்ந்து  தயாரித்துள்ளன. இயக்குநர் வெங்கட் பிரபுவும் பிரேம்ஜியும் இணைந்து இதன் முதல் தோற்றப் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். படம் பற்றி  சந்தோஷ் பி.ஜெயக்குமார் கூறும்போது, “திருமணம்  ஆகாத ஐந்து இளம் வாலிபர்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில்   சிறப்பம்சம் என்னவென்றால் இதில் கதாநாயகி என்று யாரும் இல்லை” - என்றார். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கய்யா..!

உழவர் சந்தை செட்டில் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’! 

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் புதிய படம் ‘கோழிப் பண்ணை செல்லதுரை’. அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘ஜோ’ படத்தைத் தயாரித்த விஷன் சினிமா  ஹவுஸ் நிறுவனத்தின் டாக்டர் டி.அருளானந்த், மேத்யூ அரு ளானந்த் தயாரித்திருக்கும் படம் இது. யோகி பாபு, புது முகங்கள் ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா என்று  பலரும் நடித்துள்ளனர். அசோக்ராஜ் ஒளிப்பதிவு. என்.ஆர்.ரகுநந்தன் இசை. வைரமுத்து, கங்கை அம ரன், பா.விஜய், ஏகாதசி உட்பட பலர் பாடல்கள் எழுதிஇருக்கிறா ர்கள். கிராமத்துப் பின்னணியில் உருவான இந்தப் படத்தின்  படப்பிடிப்பு ஆண்டிபட்டியில் நடந்தது. அங்கு படத்துக்காக மிகத் தரூபமாக உழவர் சந்தை செட் அமைத்து நாயகன் அங்கே  கோழிகளை விற்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன வாம். ஒரே ‘ஷெட்யூலி’ல் படத்தை படக் குழுவினர் முடித்துள்ளனர்.

மூன்று பட்டங்கள் வாங்கிய நகைச்சுவை நடிகர்!

சண்டைப் பயிற்சியாளராக வேண்டும் என கனவுடன் முத்துக்காளை தனது 18-ஆவது வயதில் கராத்தேவில் ப்ளாக் பெல்ட் பெற்றார். பின்னர் சினிமா மீது இருந்த காதலால் தனது சொந்த ஊரான ராஜபாளையத்தை விட்டு சென்னை வந்து சில படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக வேலை செய்தார். 1997-ஆம் ஆண்டு வெளியான ‘பொன்மனம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். வடிவேலுவின் நகைச்சுவைக்குழுவில் இணைந்து நகைச்சுவை நடிகராக ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். 2021-இல் வெளியான ‘பேய் இருக்க பயமேன்’ படம் அவர் கடைசியாக நடித்தது. இதனிடையே கல்வியில் ஆர்வமுள்ள அவர் தற்போது இளங்கலை தமிழ் இலக்கியத்தில் (B.lit) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றுள்ளார். இது முத்துக்காளை வாங்கும்  மூன்றாவது பட்டமாகும். கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. வரலாறு படித்துத் தேர்ச்சி பெற்றார். அதனைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு எம்.ஏ தமிழ் படித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றார். 58 வயதாகும் நடிகர் முத்துக்காளை இதுவரையில் 3 பட்டங்களைப் பெற்றுள்ளார்.  தன் ரசிகர்களுக்கு காணொலி மூலம் அவர் சொல்லியிருப்பது இது: “இளமையில் இழந்ததை மீட்டெடுக்க வேண்டும் என நான் நினைத்தேன். படிக்கும்போது என்னை நிறையப் பேர் கிண்டல் செய்தார்கள். இந்த வயதில் படித்து என்ன செய்யப்போகிறான் என்றெல்லாம் சொன்னார்கள். அதைக் கண்டு கொள்ளாமல் படித்துப் பட்டம் பெற்றேன். குடும்பத்தின் வறுமை காரணமாக என்னால் சிறுவயதில் படிக்க இயலவில்லை. சினிமாவில் ஸ்டண்ட் நடிகரானேன். அதாவது, முதலில் வீரத்தை கற்றுக்கொண்டு, செல்வத்தைச் சேர்த்து, பின்பு கல்விக்குள் நுழைந்தேன். இதற்கு  எனக்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.  இப்போதும் நான் மதுபானக்கடை வாசலில் படுத்திருப்பது போலவே நிறைய வீடியோக்கள் பரவிக்கொண்டிருக்கிறது. நான் குடியிலிருந்து மீண்டு வந்த 7 வருடங்கள் ஆகிவிட்டன. எந்த சேனலைப் பார்த்தாலும் முத்துக்காளை குடிகாரன் என்றனர். என்னை எல்லோரும் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் அதற்கு எதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டேன். ‘முத்துக்காளை 3 டிகிரி வாங்கிவிட்டாரா!’ என இப்போது திரும்பி பார்க்கும் அளவில் சாதனை செய்திருக்கிறேன். அடுத்து மது குறித்து ஆய்வு செய்யலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் அதில் நிறைய பாதிக்கப்பட்டிரு க்கிறேன். அடுத்த படிப்பு அதை நோக்கி இருக்கும் என நினைக்கிறேன். கல்லூரி மாணவர்கள் பேருந்து, ரயிலில் அருவாள், கத்தியுடன் வருவதுபோல நிறைய வீடியோக்களைப் பார்க்கிறேன். அந்தக் காலத்தில் தாயிடம் 5 ரூபாய்கூட இல்லாததால்தான் என் கல்வி பாதிக்கப்பட்டது. கஷ்டப்பட்டு உங்களைக் கல்லூரியில் சேர்த்திருப்பார். படித்து பட்டத்தை வாங்கி கொடுப்பது தான் நீங்கள் தாய், தந்தைக்கு செய்யும் நன்றிக்கடனாக இருக்கும். படிக்க வேண்டிய வயதில் நன்றாக படித்துவிடுங்கள். மற்றதெல்லாம் தானாக நடக்கும்” என்றார்.

புகைப் பிடித்தல், மது, ரத்தம் சிந்தும் காட்சிகள் கிடையாது

சிவகார்த்திகேயன் நடித்துள்ள சயின்ஸ்  பிக் ஷன் படம் ‘அயலான்’. அதன் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசும் போது, “அயலான்  பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இது தொடங்கும் முன் பான் இந்தியா என்ற வார்த்தை இல்லை. இது தமிழ் மக்களுக்காக உருவாக்கிய படம். நான் ஆசைப்பட்ட படம் கண்முன் தெரிகிறது. இதில் நானும் நடித்துள்ளேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இதில் புகைப் பிடித்தல், மது, ரத்தம் சிந்தும் காட்சிகள் கிடையாது. குழந்தைகளுக்கான விஷயங்கள் இருக்கும். என்னை சிலர் சூப்பர் என்று சொல்வார்கள். சிலர் இன்ஸ்பிரேஷன் என்பார்கள். சிலர் என்னை திட்டுவார்கள். ஆனால் நான் இதை எடுத்துக் கொள்ளவே மாட்டேன். என்னை வெறுப்பவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. என்னைப் பிடித்தவர்களுக்காக எப்போதும் போல் ஓடிக்கொண்டே இருப்பேன்” என்றார்.

பெட்டகம் - கலைஞரின் திரைப்பிரவேசம்... 

திருவாரூரில் வார ஏடாக1948 ஆம் ஆண்டின் பொங்கலன்று தொடங்கியது கலைஞரின் முரசொலி. அதன் முழக்கம் இப்படியிருந்தது: வாளை எடு வாழ்வா சாவா என்பதைப் போரில் புரிந்துகொள்வோம் என்பதற்கு மட்டுமல்ல... வாழ்விலோர் திருநாள் பாடி வளமார் நாட்டை வாழ்த்திடவும் முரசு முழங்குவதுண்டு.  அதன் முதல் இதழின் தலையங்கத்தின் நிறைவு வரிகள் இப்படி இருந்தன: இந்தப் பொங்கலில் உன் உள்ளம் பொங்கட்டும். குன்றெடுக்கும் நெடுந்தோளான் குலத்தினனே. குள்ளநரிக் கூட்டத்தின் குணமறுக்கக் கூர்வாள் எடு. சாணிப்பாலும் சீனிப்பிள்ளையாரும் பொங்கலின் குறிக்கோளல்ல. கோணிக்கிடக்கும் சமுதாயத்தின் குறை தவிர்க்க முரசறைவாய். போர் முரசறைவாய். திடும். திடும். எழுந்தது முரசொலி. எம்மினத்தவரே. முரசொலிக்கு உங்கள் ஆதரவு பொங்கட்டும்.  அந்த நாளின் பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான சிதம்பரம் ஜெயராமன் அன்றைய இயக்குநர் ஏ.எஸ்.ஏ. சாமியிடம் இப்படிச் சொல்லி வைத்திருந்தார்: எனது மைத்துனர் கருணாநிதி சிறந்த எழுத்துவன்மை படைத்தவர். எழுத்துத் துறையில் பணியாற்ற எப்போதாவது வாய்ப்பு வரும்போது அவரை உங்களோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். 1947இல் அப்படியொரு வாய்ப்பும் வந்தது. ஜூபிடர் பிக்சர்சின் ராஜகுமாரி படத்தில் பணியாற்ற கலைஞரை அழைத்தார் ஏ.எஸ்.ஏ.சாமி. கோவை சிங்காநல்லூரில் 10 ரூபாய் வாடகையில் ஒரு சிறிய வீட்டில் தன் இணையர் பத்மாவுடன் குடியேறி, ராஜகுமாரிக்கு வசனமெழுதினார் கலைஞர். அடுத்த படம் அபிமன்யூ. திரையரங்கு சென்று பார்த்தால் ராஜகுமாரியிலும் அபிமன்யூவிலும் தன் பெயர் இல்லை. அதற்கு பதிலாக கதை, வசனம் ஏ.எஸ்.ஏ. சாமி பி.ஏ.ஹானர்ஸ் என்றுதான் திரையில் ஓடியது. கொதித்துப்போன கலைஞர் பட அதிபரிடம் முறையிட்டார். உனக்கு விளம்பரம் கிடைத்தபிறகு உன் பெயரைப் போடுகிறேன். கொஞ்சம் பொறு என்று பதில் கிடைத்தது. கலைஞர் தனது வீட்டைக் காலி செய்து, திருவாரூருக்கே திரும்பிவிட்டார்.