நம் காலத்து நகைச்சுவைக் கலைஞர் வகைப்புயல் வடிவேலு ஒரு படத்தில் இப்படிச் சொல்வார்: “ஒருவிரல் கிருஷ்ணா ராவ்னு ஒருத்தர் இருந்தாரு. அவருக்கென்ன ஒருவிரல்தான் இருந்துச்சா? ஒருவிரல்ங்குறது அவரோட அடை மொழிடா...” - என்பார். இப்படி நேற்றுவரை யில் பேசப்படக்கூடியவரான ஒருவிரல் கிருஷ்ணா ராவ் அந்தா பெயருக்கு உரியவ ரானதற்குக் காரணமாக இருந்த படம்தான் ஒருவிரல். அது 1965 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்ப்படம். அந்தப் படத்தில் அறிமுகமாகிற போது கிருஷ்ணா ராவ் டி.என். என்றுதான் அவரது பெயர் காட்டப்பட்டது. ஒருவிரல் படத்தின் வெற்றிக்குப்பின் அவருடைய பெய ரோடு அவர் முதன்முதலாக நடித்த அந்தப் படத்தின் பெயரும் ஒட்டிக்கொண்டுவிட்டது. இதே படத்தில் வேறு சிலரும் அறிமுக மாகினர். ஆனால், அவர்களின் பெயருக்குப் பின்னால் எந்த அடைமொழியும் ஒட்டிக் கொள்ளாமல் போய்விட்டது. அப்படி அறிமுக மான இன்னொரு நடிகர் தேங்காய் சீனிவாசன். இவர்களோடு கவர்ச்சி வில்லன் கண்ணன், பிரேம் ஆனந்த், பண்டரிநாத், மலேசியா ராதிகா, வி.ஆர்.திலகம், மீனாகுமாரி போன்றோரும் நடித்திருந்தார்கள். அந்நாளின் துள்ளல் இசை வேந்தனான வேதா ஒருவிரல் படத்திற்கான இசை யமைப்பை வழங்கியிருந்தார். அவரது இசை யில் இந்தப் படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள். எல்லாப் பாடல்களையும் ஆலங்குடி சோமு இயற்றினார். ‘மல்லிகை மொட்டு சங்கெடுத்து...’ - என்று தொடங்கும் பி.சுசீலா பாடிய பாடலும், சுசீலாவுடன் டி.எம்.சௌந்தர ராஜன் இணைந்து பாடிய ‘உங்கள் தேவை என்னவென்று...’ - என்று தொடங்கும் பாடலும் ரசிகர்களிடையே பிரபலமாகின.
அப்போது தமிழ் சினிமாவில் திகில் படங்கள் பெரியளவுக்கு உருவாகவில்லை. வீணை எஸ்.பாலச்சந்தர் போன்ற வெகு சிலரே அப்படியான படங்களை எடுத்தார்கள். அதுவும் சொற்ப எண்ணிக்கையில்தான். மர்மக் கதை யமைப்பு, திகிலூட்டும் சம்பவங்கள், துப்பறிதல் என்று சொல்லப்பட்ட புலனாய்வு ரக சினிமாக்களைத் தமிழ்த் திரைப்பட உலகம் அதிகம் சோதித்துப்பார்க்காத வேளையில் அந்தத் தேக்கத்தை உடைக்கிற படமாக வெளி வந்தது இந்த ஒருவிரல். அதிலும் மிகவும் அளவான செலவில், குறைந்த பட்ஜெட் பட மொன்றைத் திரில்லர் வகையில் உருவாக்கி, அதனை ரசிகர்கள் வெற்றிப்படமாக ஆக்கி யது ஒருவிரலின் சாதனையாகவே பார்க்கப் பட்டது. வசூலிலும் எதிர்பாராத வெற்றியை ஈட்டியது. இதில் நடித்த கலைஞர்கள் புதுமுகங்களாக இருந்தார்கள். அல்லது அதிகம் புகழ் பெறாத நிலையில் இருந்தார்கள். அதனால் அவர்களுக்கு அதிகளவு சம்பளம் தரத் தேவை இல்லாத நிலையும் இந்தப் படத்திற்கான செல வினத்தில் சிக்கனத்தை ஏற்படுத்தியிருந்தது. இத்தனையையும் தாண்டி மிக அற்புதமான கதையமைப்பால் ரசிகர்களைக் கவர்ந்தது இந்த ஒருவிரல்.
சி.எம்.வி.ராமன் என்பவர் இதன் கதையை எழுதி, இயக்கினார். அவருடன் பி.எஸ்.மூர்த்தி உடனிருந்து மேற்பார்வையிட்டார். இதில் நடித்த மலேசியா ராதிகா அதன் பின்னர் அதிகப் படங்களில் நடிக்கவில்லை. அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர் என்பதால் தனது தாயகமான மலேசியாவுக்கே திரும்பிச் சென்று அங்கே வெற்றிகரமாக நடனக் கலையைத்தொடர்ந்தார். ஒருவிரல் படத்தின் கதைப்படி இரண்டு எலும்புக்கூடுகள் வருகின்றன. அவற்றுள் ஒன்றின் ஒரு கையில் ஒரு விரல் இல்லாமல் இருக்கிறது. அதைத்தான் படத்தின் பெயரும் சுட்டியது. இரண்டு மகன்களைக் கொண்ட ஒரு பணக்காரத் தகப்பன் மர்மமான முறையில் படு கொலை செய்யப்படுகிறார். படத்தின் துவக்கக் காட்சியே இந்தப் படுகொலையோடுதான் தொடங்குகிறது. படம் நெடுக அந்தக் கொலைகாரனைத் தேடுவதே கதை. இரண்டு எலும்புக்கூடுகள் மனித வேட்டையில் இறங்கியிருக்கின்றன என்று ஒரு கதை கொலையுண்ட பணக்காரருக்குச் சொந்தமான மலைத்தோட்டத்தில் உலவுகிறது. அந்த எஸ்டேட்டின் ஊழியர் (கண்ணன்) தான் குற்றவாளி என்பதும் போகப் போகத் தெரியவருகிறது, அதனைத் துப்புத்துலக்க அயத எஸ்டேட்டில் வேலைக்குச் சேர்வதுபோல வந்து சேருகிற புலனாய்வாளர் (தேங்காய் சீனிவாசன்) தனது அறிவாற்றலால் அனைத்து மர்மங்களையும் விடுவிக்கிறார். சால்வடார் ஃபெர்னாண்டஸ் இந்தப் படத்தின் அறிமுகத் தயாரிப்பாளர். அவரும் இந்தப் படம் வெற்றிபெற்ற நிலையிலும் அதிகம் படங்களைத் தயாரிக்கவில்லை. நான்கு தலை முறைகள் கடந்தும் இன்றும் ஒரு பேசுபொரு ளாக இருக்கிறது ஒருவிரல் படத்தின் பெயர். ஒல்லியான தேகத்தோடு வசனங்களை நேரம்பார்த்துக் கச்சிதமாகப் பேசக்கூடிய வராக ஒருவிரல் கிருஷ்ணா ராவ் தலைமுறை கள் கடந்தும் பெயரெடுத்தார். அவரது பெய ரோடு ஒட்டிக்கொண்டதால் படத்தைக் காலம் மறந்தாலும் ஒருவிரல் என்ற அதன் பெயர்மட்டும் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது காலங்கள் கடந்தும்.