தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெள்ளியன்று வெளியாகவிருக்கும் பிரம்மாண்ட படம் ரத்தம் ரணம் ரௌத்திரம். இதை ஆர்ஆர்ஆர் என்கிறார்கள் சுருக்கமாக. ராஜமௌலியின் பாகுபலிக்குப் பிறகு இது அவரது அடுத்த படைப்பு. பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிற இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தெலுங்கில் ராம் சரணும் ஜூனியர் என்டிஆரும் சேர்ந்து நடித்திருப்பதால் ரசிகர்களைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல என்று கருதப்படுகிறது. வெறித்தனமான இவர்களின் ரசிகர்களால் திரைக்கு எந்தச் சேதமும் ஏற்பட்டுவிடாமல் இருக்க திரைக்கு முன்பாக மேடையில் மிகப்பெரிய ஆணிப்படுக்கை செய்யப்பட்டிருக்கிறதாம். விஜயவாடாவிலுள்ள அன்னபூர்ணா திரையரங்கில்தான் இப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதேபோல இன்னும் பல திரையரங்குகளிலும் திரைக்கு முன்பாக ஆணிப் படுக்கைகள், கம்பித் தடுப்புகள் போடப்பட்டு வருகின்றனவாம். யாரை நம்பிப் படமெடுக்கிறார்களோ அதே ரசிகர்களை எப்படியெல்லாம் அவமதிக்கவும் முடிகிறது இந்தச் சினிமா உலகத்தினரால்!